‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது – வைரமுத்து

1176 மதிப்பெண்கள் எடுத்தும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி, அனிதா, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள அவரது மரணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து அவரது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது,

‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் மரணம் மூன்று வகை.

இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு,
இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு,
மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

தற்கொலை தீர்வல்ல, வாழ்வுதான் தீர்வு.

Read Previous

அனிதா மறைவு – ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்

Read Next

எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள் – ஜி.வி.பிரகாஷ்