மூன்வாக் – அனைத்துப் பாடல்களையும் பாடும் ஏஆர் ரகுமான்

பிஹிண்ட்உட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம் ‘மூன்வாக்’.

மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் தயாரித்து இயக்கும் இப்படத்தில், தன் நீண்டகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக,  ஏஆர் ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என படத்தில் உள்ள ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்குப் பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளை வெளியிட்டு வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படம் குறித்து, மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்,

“மியூசிக்கில் ஏஆர் ரகுமான் சார், டான்ஸில் பிரபுதேவா சார்,  இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ‘ஜென்டில்மேன், காதலன்’ போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்குக் கொண்டுவர வேண்டும் என நினைத்தேன்.  இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், ‘மூன்வாக்’ திரைப்படமாக உருவானது. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்தத் திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி கொண்டாட்டமான படம். திரையரங்குக்கு வரக்கூடிய குடும்ப ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கம்.

இப்படத்தில் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. நானும் ரஹ்மான் சாரும் பேசும்பொழுது இந்த ஐந்து பாடல்களும் மக்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என எண்ணினோம். முதலில் இந்தியாவின்  ஒரு பெரிய பாடகரைப் பாட வைத்து அந்த பாடலை பதிவு செய்தார். ஆனால், இது ரஹ்மான் சாருக்காகவும், பிரபுதேவா சாருக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படம். அதில் அவர் குரலைத் தவிர யாரையும்  என்னால் யோசிக்க முடியவில்லை. அவரது குரலே மக்களுக்கு முழுமையான உற்சாகத்தை கொடுக்க கூடியது. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன்.  இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ. ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்,” அவருக்கு நன்றி என்றார்.

பிரபுதேவா மாஸ்டர் இருப்பதால் நடனத்திற்கு முழு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து உழைத்து இருக்கிறோம். பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். ‘மயிலே’ பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார்.  ‘மயிலே’ பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு, அவர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்”

ஏஆர் ரகுமான் கூறுகையில்,

“பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் ‘கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான்’ என நகைச்சுவையாகக் கூறினார். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.

இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வு செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதையே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன்.  மனோஜின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் என் கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டு வருவேன் என்ற மனோஜின் ஆர்வம் மற்றும் உற்சாகத்திற்காகவே இந்த திரைப்படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை,” என்றார்.

பிரபுதேவா கூறுகையில்,

“என் திரைப் பயண தொடக்கத்திலிருந்தே ரகுமான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதைக் காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.

ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் ‘மூன்வாக்’, உலகத் தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக அடுத்து வருடம் 2026 கோடை விடுமுறை வெளியீட்டுக்கு உருவாகி வருகிறது.

Read Previous

எல்லோருக்கும் பிடிக்கும் ‘வா வாத்தியார்’ – கார்த்தி

Read Next

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – பத்திரிகைச் செய்தி