‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. சுமார் 100 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் கமல், தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களைச் சந்தித்தார் இயக்குநர் சிதம்பரம். அனைவருமே படத்தின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மேலும் சிலர் சிதம்பரத்துக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதனிடையே, சிதம்பரத்தின் அடுத்தப் படம் தமிழில் தான் என்று தகவல் பரவி வருகிறது. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் சில காலம் ஓய்வெடுக்கவுள்ளார் சிதம்பரம். அதற்கு பின்னரே தனது அடுத்த படம் குறித்து முடிவு செய்யவுள்ளார். அது கண்டிப்பாக மலையாள படம் என்று முடிவு செய்துவிட்டார்.
அந்த மலையாள படத்தினை முடித்த பின்பு தான், தமிழில் படம் இயக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அது என்ன கதை, யார் நாயகன், யார் தயாரிப்பாளர் என்பது கூட முடிவாகவில்லை.