அஜித் நடிக்கும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அந்தப் படப்பிடிப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனிடையே, அங்கு நடைபெறும் படப்பிடிப்பைப் பற்றி ஆஸ்திரிய நாட்டு பத்திரிகை ஒன்று புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரிய நாட்டின் தென் பகுதியான கரிந்தியா என்ற நகரில்தான் அஜித்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆல்ப்ஸ் மலை மற்றும் ஏரிகள் அடங்கிய ரம்மியமான பகுதி அது. அங்குள்ள மலைப் பகுதி ஹோட்டல் ஒன்றில் படக் குழுவினர் தங்குவதற்காக 35 ரூம்கள் புக் செய்யப்பட்டுள்ளனவாம்.
அஜித் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ள சமையல்காரர் ஒருவர் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறாராம். அங்குள்ள ‘கோல்ன்பெர்ன்’ அணைப் பகுதியில்தான் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஜித் இந்தப் படத்தில் எஃப்பிஐ ஏஜன்டாக நடிக்கிறார் என்றும் அவர்கள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் அஜித்தை இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் என்றும் ஜார்ஜ் குளூனி என்றும் குறிப்பிட்டு அந்தப் பத்திரிகை சில புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளது.