‘பவர்ஸ்டார்’ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ஆகி விட்டாரோ என்றுதான் பல படங்கள் யோசிக்க வைக்கின்றன.
‘ஐ’ படத்துல கூட ஆரம்பத்துல நடிச்சிருக்காருன்னு, ஃபோட்டோலாம் போட்டாங்க. அவர் ‘ஐ’ படத்துல இருப்பாரா, இல்லையாங்கறது..ஷங்கருக்கே வெளிச்சம்.
போன வாரம் வெளிவந்த ‘விழி மூடி யோசித்தால்’ படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார் பவர் ஸ்டார்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகுதான் சிறு குழந்தைகளுக்குக் (?) கூட பவர் ஸ்டார் யார் என்பது தெரியும். ஆனால், அதற்கு முன்பே ‘லத்திகா’ ஸ்டாராக அவரை தமிழ்த் திரையுலகின் தீ….விர ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
அந்தப் படத்தை எப்படியெல்லாம் ஓட வைத்தேன் தெரியுமா என, நேற்று நடைபெற்ற ‘மு பு ஜாக்கிரதை’ என்ற குறும்படி திரையிடல் நிகழ்ச்சியில் கலங்கிப் பேசினார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
“லத்திகா’ படம் உண்மையிலேயே பத்து நாள்தான் ஓடுச்சி. ஆனால், படத்தை 100 நாளைக்கு மேல ஓட வைக்கலாம்னு சொன்னாங்க. எப்படின்னு கேட்டேன், ஒரு குவார்ட்டம், பிரியாணி பொட்டலமும் போதும்னு சொன்னாங்க. அப்படி கொடுத்து கொடுத்தே படத்தை 225 நாளைக்கு ஓட வச்சேன். 100வது நாள் விழா கொண்டாடனும்னு சொன்னாங்க, அதுக்கும் செலவழிச்சேன்.
அப்புறம் ‘ஆனந்த தொல்லை’ படத்தை டெய்லி 8 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணினால், படத்தை எடுத்துடலாம்னு சொல்லிட்டு ஒருத்தன் வந்தான். அப்புறம் அது தினமும் மூணு லட்ச ரூபா செலவுல போய் நின்னுச்சி. ஒரு வழியா படத்தை முடிச்சிட்டு, ரிலீஸ் பண்ண ரெடியாகிட்டேன்.
நடுவுல என்னை கைதுலாம் பண்ணாங்க, நான் எங்கயும் ஓடி ஒளியலை, கூப்பிட்டால் வரப்போறன். இப்பவும் என்னை நிறைய பேர் நடிக்கக் கூப்பிடறாங்க, ஆனால், சம்பளத்தைக் கேட்டால் உங்க கிட்ட இல்லாத பணமா சார்னு கேக்கறாங்க. நிஜமா என்கிட்ட பணமே இல்லை. அதனால நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் கண்டிப்பா சம்பளமும் கொடுத்துடுங்க, ” என கலங்கினாலும் காமெடியாகப் பேசி கைத்தட்டல்களை வாங்கினார் பவர் ஸ்டார்.
‘மு பு ஜாக்கிரதை’ என்ற குறும்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி நடித்து திரையிட்டார். நிகழ்ச்சியில் ‘பருத்தி வீரன்’ சரவணன், நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட திரையுலகத்தினரும் கலந்து கொண்டனர்.