மக்கள் பாசறை சார்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்கே நாயகனாக நடிக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’.
இந்தப் படத்தில் நீது சந்திரா நாயகியாக நடிக்க, இனியா, சுஜா வருணி, கோமல் சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ், ஆர்கே இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தின் தொடக்க விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே. பேசும்போது “நானும் ஷாஜி கைலாசும் இணையும் 3 வது படம் இது. நாங்கள் இருவரே இணைந்து எத்தனை படம் தொடர்ந்து செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். நல்லவர்களுடன் இணைந்திருப்பதுதான் நல்லது. டைரக்டர் இந்தக் கதை பற்றிக் கூறும் போது இது ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல 10 மடங்கு இந்தப் படம் சிறப்பாக இருக்கும், எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றார்.
நாம் விரும்புகிறவரை விட நம்மை விரும்புகிறவரை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல காதலுக்கு நல்லது, அது சினிமாவுக்கும் நல்லது என்று அப்போது நான் உணர்ந்தேன். எனவே இந்தப் படத்தின் கதை எனக்காக உருவானதால் ஏற்றுக் கொண்டேன். இது நிச்சயமாக தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதை. முழுக்கதையும் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கிறது. மூன்றே மாதத்தில் படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
நடிகர் நாசர் பேசும் போது ”ஆர்.கே. எப்போதும் பரபரப்பாக இருப்பவர். அவருக்கேற்ற பரபரப்பான கதை இது. அவர் படத்தில் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். படத்தின் கதையை பிரபாகர் ஒரு மணி நேரம் சொன்னார். சொல்லி முடித்த போது பத்து நிமிடத்தில் சொன்ன மாதிரி இருந்தது, அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது. இது அனைவருக்கும் பிடித்த த்ரில்லராக இருக்கும்,”என்றார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும்போது ” ஆர்கே என்னைக் கூப்பிட்டு மூன்றே வரிகளில் அய்யா, இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா என்றார், உடனே ஒப்புக் கொண்டேன். ஒரு குழு இணைந்து தொடர்ந்து பணியாற்றலாம். நல்லவர்களோடு தொடர்ந்து இணைவதில் தவறில்லை. ஆர்.கே யாரும் செய்யாத வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். ‘புலிவேஷம்’ படத்தில் என்னை வில்லனாக்கியவர் அவர்தான்,” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா “சினிமாவில் கதை சொல்லும் போது ரயிலை வைத்து காட்சி ஆரம்பமாகிறது என்றாலே அதை பஸ்ஸாக மாற்றுங்கள் என்பார்கள். ரயிலை வைத்து எடுப்பது என்றால் டெபாசிட் 15 லட்சம் கட்ட வேண்டும், அதுவும் திரும்பி வராது, அனுமதி வாங்குவது சிரமம். இப்படிப் பல கஷ்டங்கள் இருக்கும் போது முழுப்படமும் ரயிலில் எடுப்பது என்றால் இவர்களின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும். டைரக்டருடன் கேமராமேன் சஞ்சீவ் சங்கர், இசையமைப்பாளர் தமன், வசனகர்த்தா பிரபாகர் இப்படி பல திறமைசாலிகள் இதில் இணைந்து இருக்கிறார்கள்,” என்றார்.
நடிகர் சிங்கமுத்து பேசும்போது ”நடிகர்கள் மீது இவர்களுக்கு ரொம்பவே அக்கறை வெயில் படாமலேயே முழுப் படத்தையுமே ரயிலில் எடுக்கிறார்கள், இதில் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள்,” என்றார்.
இயக்குநர் ஷாஜி கைலாஷ் பேசும் போது, “இது பலர் இணைந்திருக்கும் படம், படக் குழுவினர் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்,” என்றார்.
நடிகை சுஜா வாருணி பேசும்போது, “ஷாஜி கைலாஸ் சாரின் மலையாளப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ்ப் படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆர்.கே. சாருக்கும் ஷாஜி சாருக்கும் நன்றி,” என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும் போது ”இன்று பிரதோஷம், நாளை சிவராத்திரி, நல்ல நாளில் தொடங்குகிறது இப்படம், வாழ்த்துக்கள்,”என்றார்.
.
வசனகர்த்தா பிரபாகர் பேசும் போது, ‘போக்கிரி’க்குப் பிறகு பிற மொழிகளுக்குப் போய் விட்டேன். ‘எல்லாம் அவன் செயல் ‘ படத்தில் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து அடையாளம் கொடுத்தார்கள். ஷாஜி சார், மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர். அவரை ‘வாஞ்சிநாதன்’ படப்பிடிப்பில் முதலில் சந்தித்தேன். இப்போது கேப்டனின் இடத்தை நோக்கிய பயணமாக ஆர்.கேயை உருவாக்கி வருவதாக நினைக்கிறேன்,” என்றார்.
நடிகை நீது சந்திரா பேசும் போது, “பத்து வருடங்களுக்கு முன் ஷாஜி சார் ‘விஷ்ணு’ என்கிற தெலுங்குப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு அவரது இயக்கத்தில் இப்போதுதான் நடிக்கிறேன். அருமையான கதை, எனக்குப் பெயர் சொல்லும் படியான வாய்ப்பு,” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து முழுப் படமும் ரயிலிலேயே நடைபெறுகிறது.
