அமேசான் ஓடிடி தளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெப் தொடர் ‘த பேமிலி மேன் 2’. அத்தொடரில் இலங்கை இனப் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றியும் பல தவறான, அவதூறான விஷயங்களை வைத்திருக்கிறார்கள் என தமிழர்களிடம் பெரும் சர்ச்சையும், கோபமும் எழுந்தது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பல தமிழர் அமைப்புகள், தமிழார்வலர்கள், இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் அத்தொடருக்கு எதிராக குரல் எழுப்பினர். அத்தொடரைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கும் வைத்தனர். அமேசான் ஓடிடி தளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் கட்சிகள், அமைப்புகள் ஆகியவைம் அத்தொடருக்கு எதிராகவும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகேவுக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர்.
அப்படி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் புதிதாக ஆரம்பமாகியுள்ள ஒரு வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி இன்று முதல் நடித்து வருகிறார். இது இலங்கைத் தமிழர்களிடமும், தமிழர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரில் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஏற்கெனவே, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் போஸ்டர்களும் வெளியானது. அதற்கு உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைக் கண்டு விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது மீண்டும் இலங்கைத் தமிழர்களை கோபமடைய வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது