‘காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை’ படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடைசி விவசாயி’.
இப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் தான் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் மணிகண்டன் கூறுகையில்,
“விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு.
ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வத்தை கும்பிடாமல் இருக்கிறோம் என அதை கும்பிட ஊர் தயாராகிறது. அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும்.
அப்போது தான் அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று தெரிய வருகிறது.. 20 வருடமாக குலதெய்வத்தைக் கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இல்லை.
அந்த ஊரில் முதியவர் ஒருவர், சிறிய நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க அவருக்குக் காதும் அவ்வளவாகக் கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அதற்கு அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.
கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாகச் சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்து கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.
உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கி இருக்கிறேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம் தமிழர்களின் விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது, கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களை கடைசி விவசாயிகளாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.
படத்தில் கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துள்ளது. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்.
2020-ம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறாராம் இளையராஜா.
கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர்.
மேலும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில் கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது.
சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘கடைசி விவசாயி’ நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.