காமன் மேன் பி.கணேஷ் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜா ரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘றெக்க’.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
போன மாதம் ‘தர்மதுரை’, இந்த வாரம் ’ஆண்டவன் கட்டளை’ என இரு வெற்றிப் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தவர் விஜய் சேதுபதி. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த ‘றெக்க’ படமும் வெளியாக உள்ளது. அடுத்தடுத்த வெற்றி அவருக்கு ஒரு பதற்றத்தைக் கொடுத்துள்ளது போலும். வெற்றியால் வரும் பதற்றம் பற்றி அவர் கவலைப்பட வேண்டியதேயில்லை. இருந்தாலும் அவரது பேச்சி இன்று ஒரு பதற்றம் இருந்தது.
“ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது.
படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர, இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.
முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் முடியுமா என தயங்கினேன். முடியுமா என எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன. ஆனால் சிவா கதை சொன்ன விதம், வசனம் பேசிக் காட்டிய முறை, எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா என்னென்னவோ செய்தார், என்னைக் கவர்ந்தார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.
இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால், ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது.
இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார், அவர் மேலும் உயர்வார். லட்சுமி மேனனுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார்.
கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான். ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது.
படக் குழுவினருக்கு நன்றி, ரசிகர்களுக்கு நன்றி. சத்தியமாக நிறைய பேசத் தோன்றுகிறது. ஆனால் பேச முடியவில்லை அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன்,” என்றார் விஜய் சேதுபதி.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, துணைத் தலைவர் கதிரேசன், இயக்குநர்கள் மகிழ் திருமேனி, பன்னீர்செல்வம், படத்தின் இயக்குநர் ரத்தின சிவா, இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி, நடிகர்கள் சதீஷ், ஹரீஷ், எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
முன்னதாக தயாரிப்பாளர்கள் பி.கணேஷ், சுபா கணேஷ் அனைவரையும் வரவேற்றார்கள்.