தமிழ் சினிமாவில் சிறு வெற்றியைக் கூட பிரம்மாண்டமான வெற்றி என்று கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்படும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சிலருள் இயக்குனர் வசந்தபாலனும் ஒருவர். “வெயில், அங்காடித் தெரு, அரவான்” என வித்தியாசமான படங்களை இயக்கியவர் அடுத்த ஒரு வித்தியாசமான முயற்சியாக ‘காவியத் தலைவன்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே இன்று தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் வசந்தபாலன் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
அதில், கேபிள் டிவியில் திருட்டுத்தனமாக படங்கள் ஒளிபரப்பப்பட்ட விஷயத்தில் விஷால் எடுத்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அதே சமயம், யு டியூப் ஹிட்ஸ் அதிகமாக கிடைத்து விட்டது என்பதற்கெல்லாம் சந்தோஷப்பட வேண்டியதில்லை.
சினிமாக்காரர்கள் ஒட்டு மொத்தமாக இறங்கி போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
“திருட்டு விசிடிக்கு எதிரான விசாலின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.விசாலை போன்று ஒவ்வொரு கதாநாயகனும் இயக்குனரும் ஏன் ஒவ்வொரு சினிமாக்காரனும் களத்தில் இறங்கினால் தான் இந்த திருட்டு சிடி பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஆம்னி பஸ்ஸில் ஏன் அரசு நெடுந்தொலைவு பேருந்துகளில் திருட்டு விசிடி ஒளிப்பரப்புகிறார்கள்.
சென்னை கோயமுத்துரர் தவிர அனைத்து சிறு நகரங்களில் சனிக்கிழமை மாலைக்காட்சி, இரவுக்காட்சி, ஞாயிறு மாலைக்காட்சியை தவிர திரையரங்குகளில் கூட்டமே இல்லை.இருபது பேர், நாப்பது பேர், எண்பது பேர் காட்சிக்கு காட்சி பார்க்கிறார்கள்.
பெரிய ஹீரோக்களின் (ரஜினி.அஜீத்,விஜய்.சூர்யா) படங்களுக்கு கூட்டம் வருகிறது. மற்ற அனைத்து கதாநாயகர்களின் நிலமை மிக மோசம். படம் நல்லாயிருக்கிறது என்ற செய்தி பரவி கூட்டம் திரையரங்குக்கு வர நாள் ஆகிறது. பெருநகரங்களை தவிர சிறு நகரங்களில் திரையரங்குகளில் படம் ஓடி சம்பாரிப்பது சிறு படங்களுக்கு பெரும் கனவு தான்.
சாட்டிலேட் விற்பனையையும் சென்னை நகரத்தில் படம் ஓடுவதையும் நம்பி தான் சினிமா இருக்கிறது.ஆடியோ பிசினஸ் இல்லை. இதில் U/A, A படங்களுக்கு 30% வரி விதிப்பு வேறு சினிமாவை ஆட்டிப்படைக்கிறது.
youtubeல் நம் டிரைலரை 21 லட்சம் பேர் பார்த்து விட்டார்கள் என்ற கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் இந்த 21 லட்சம் பேர் நம் படத்தின் பாடல்களை இலவசமாக டவுண்லோடு செய்து கேட்பார்கள் என்று அர்த்தம். படம் வெளிவந்தால் இந்த 21 லட்சம் பேரும் திரையரங்குக்கு வருபவர்கள் அல்ல. பாதி பேர் முடிந்தால் நம் படத்தையும் டவுண்லோடு செய்து பார்த்துவிடுவார்கள் என்று தான் அர்த்தம் .youtube ஹிட்டிற்காக நாம் சந்தோசப்பட ஒன்றுமில்லை நண்பர்களே.
அடுத்து சினிமா போஸ்டர்களின் முலம் விளம்பரத்தை நிறுவமுடியாத நிலை வேறு ஏனெனில் போஸ்டர் ஒட்டுவதற்கான சுவர்கள் குறைந்து விட்டன.கட்டுப்பாடுகள் பெருகி விட்டன. ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒரு நாள் கூட சுவரில் இருப்பதில்லை அதைக்கி ழித்துவிட்டு அதன் மீது அடுத்த போஸ்டர் ஒட்டப்படுகிறது. பிளக்ஸ் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என்ற தடை வேறு .
தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது தான் ஓரே வழி. அதன் விளம்பர செலவு மிக அதிகமாக இருக்கிறது.சில கோடிகளை முழுங்குகிறது. நாம் இலவசமாக கொடுக்கும் பாடல்களை காமெடி காட்சிகளை, சண்டைக் காட்சிகளை விதவிதமாக பிரித்துபிரித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் போடுகிறார்கள். ஆனால் நாம் விளம்பரமுன்னு போய் நின்றால் பல லட்சங்களை கேட்கிறார்கள்.ஒட்டுமொத்தமாக சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி நம் வாழ்வாதாரத்திற்கு போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.