எஸ்எஸ்எஸ் மூவீஸ் எ.எஸ்.டி. சலீம் மற்றும் அனு மூவீஸ் பி.ரவிக்குமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருட்டு ரயில்’.
திருப்பதி இயக்கத்தில் ஜெயப்பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் ரக்ஷன், சரண் செல்வம், காத்தி, சென்ட்ராயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, சண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ‘பசங்க’ சிவக்குமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன், அருள்ஜோதி, ராஜேந்திரன், பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தூத்துக்குடியில், ஐந்து நண்பர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட, அதைச் சமாளிக்க முடியாத நண்பர்கள் திருட்டு ரயில் ஏறி சென்னைக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு மிகப் பெரும் பிரச்சனை ஒன்று காத்திருக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
“ஒரு அரசியல்வாதிக்கும், ஒரு ரவுடிக்கும் இடையே நடக்கும் பிரச்சனையில் ஐந்து நண்பர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். தூத்துக்குடியில் ஒரு சாதாரணப் பிரச்சனைக்கே பயந்து ஓடி வருபவர்கள், இங்கு உயிர் போகும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். திருட்டு ரயில் ஏறி வருபவர்களோட வாழ்க்கை நல்லா அமைஞ்சிடும்னுலாம் நாங்க சொல்லலை. சமய சந்தர்ப்பங்கள் எப்படிலாம் அமையும்கறதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்துல நாயகனா அறிமுகமாகிற ரக்ஷன், மு.க.ஸ்டாலினோட மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியோட மகன். இந்தப் படத்துக்காக அவர் கூத்துப்பட்டறையில ஆறு மாதங்கள் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டாரு. இரண்டாவது ஹீரோவா நடிச்சிருக்கிற சரண் செல்வம் ஏற்கெனவே மூணு படங்கள் பண்ணியிருக்காரு.
என்னோட முதல் படம் ‘முத்து நகரம்’, இது இரண்டாவது படம். நாகர்கோயில், திருவெண்காடு, சென்னை ஆகிய இடங்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். ரயில் சம்பந்தமான காட்சிகள் ஹைதராபாத்துல படமாக்கியிருக்கிறோம்.
இந்தப் படம் ஆரம்பிச்சி இதுவரைக்கும் பார்த்தீங்கன்னா, எங்க படத்துல இருக்கிற மாதிரியான பல காட்சிகள் ஏற்கெனவே வந்த சில படங்கள்ல வந்துடுச்சி. அதனால, பல காட்சிகளை மாத்தி ரீ-ஷுட்லாம் பண்ணோம்.
படத்துல இமான் அண்ணாச்சி, மயில்சாமி நகைச்சுவைலாம் ஹைலைட்டா இருக்கும். நகைச்சுவையோட ஒரு பரபரப்பும் படம் முழுவதும் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் திருப்பதி.