சன் டிவியில் ஒளிபரப்பாகி பெண்களின் ஆதரவைப் பெற்ற ‘அத்திப் பூக்கள்’ மெகா தொடரை இயக்கிய மருது ‘அகத்திணை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் புதுமுகம் வர்மா நாயகனாக அறிமுகமாக ‘சாட்டை, என்னமோ நடக்குது, மொசக்குட்டி” ஆகிய படங்களில் நாயகியாக நடித்த மகிமா நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தினைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக மனதைத் தொட்ட உணர்வு பூர்வமான காதல் கதை என்று படத்தைப் பாராட்டி ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது, “காதலுக்காக எதையும் இழக்கலாம், காதலைத் தவிர, என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதையே இந்த ‘அகத்திணை’.
பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றி அகத்திணையில் பாடப்படுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று அகத்திணை என்று பெயர் வைத்தோம்.
படத்தில் பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார். அதில் தந்தைக்கும் மகளுக்குமான உறவை, அன்பை, பாசத்தை மிக அழகாகச் சொல்லும் ஒரு பாடல் அனைத்து அப்பா, மகள்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
படம் விரைவில் திரைக்கு வருகிறது.