கலைஞர் டிவியில் ராதிகா நடிக்கும் ‘வாணி ராணி’

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தெய்வமகள், நாயகி, திருமதி செல்வம்” ஆகிய நெடுந்தொடர்களுக்கு குடும்பத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மற்றொரு பிரம்மாண்ட நெடுந்தொடர் ஒன்றை ஒளிபரப்ப கலைஞர் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிரம்மாண்ட நெடுந்தொடரான ‘வாணி ராணி’ வருகிற ஜூலை 19-ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்கா தங்கையான வாணி ராணி, அண்ணன் தம்பிகளான சாமிநாதன், பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக, அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.

கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், புகுந்த வீட்டில் ஏற்படும் சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இவர்களின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சுவாரசியமான சம்பவங்கள் தான் ‘வாணி ராணி’ நெடுந்தொடரின் கதை.

இத் தொடரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு பிரித்விராஜ், நீலிமா ராணி, அருண் குமார் ராஜன், விக்கி கிரிஷ், சாந்தி வில்லியம்ஸ், மமீலா ஷைலாஜா பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார் எழுத்தில் ஓ.என்.ரத்தினம் இயக்கத்தில் இந்த தொடர் உருவாகி இருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும், “திருமதி செல்வம்” நெடுந்தொடர் வருகிற 19-ந் தேதி முதல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Roar Of RRR – RRR Making Video

Read Next

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ – டீசர்