ஜீனியஸ் – மனைவியின் கேள்வியால் நடிக்க வந்த புதுமுகம்

சுசீந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் புதுமுகம் ரோஷன், யோகேஷ், மோனிகா மற்றும் பலர் நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது,

“நான் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாகத்தான் இருந்தது. இந்தக் கதையையும், கதாபாத்திரத்தைப் பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்தக் கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.

கடைசியாக இந்தக் கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ‘ஜீனியஸ்’ படமாக உருவாகி உள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பி.கே’ திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் இப்படத்தை இயக்கியுள்ளேன்.

இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி,” என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

தயாரிப்பாளரும், நாயகனுமான ரோஷன் பேசுகையில்,

“சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்தத் தொழிலை பார்க்கச் சென்று விட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல் தான் இருந்தேன்.

கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் “நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ?,“ என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிசினஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப் பெரிய பலம். அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக் கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால் தான் நான் இன்று இங்கு உள்ளேன்.

முதலில் ஒரு படத்தைத் தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளது. ‘ஜீனியஸ்’ போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி,” என்றார் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ரோஷன்.

Read Previous

திரைப்படம் ஆகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

Read Next

லக்ஷ்மி, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நடனப் படம்