ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக இலவச பள்ளி கட்டும் பணியை நேற்று துவங்கினார்.
தனது டிரஸ்ட் மூலம் 60 குழந்தைகளை அரசு பள்ளிகளிலும், 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் தான் பள்ளிக்கூடம் கட்ட முடிவெடுத்தார்.
PRE KG முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும் இப்பள்ளி இன்னும் வசதி வரும்போது பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
“ நான் தான் சரியாக படிக்கல, படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆலயம் ஆயிரம் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது என்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. நான் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும், என்னையும் ஆதரித்து கொண்டிருக்கும் உங்களை என் வாழ்கையில் என்றுமே மறக்க மாட்டேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த சகோதரனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்,” என்றார் லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் ஒரு டான்ஸ் ஹீரோ என்பதால் எல்லா நாட்டிலிருந்தும் நட்சத்திர கலை விழா நடத்த அழைப்புகள் வந்தது. இவரது நடனத்திற்கு உலக நாடுகளில் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. ஆனால் எல்லாவற்றையும் மறுத்து வந்தார் லாரன்ஸ்.
தற்போது இந்த பள்ளிக்கூட நிதிக்காக முதன் முறையாக நட்சத்திர கலை விழா நடத்த உள்ளார்.