‘துருவங்கள் 16’ படம் மூலம் இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமானவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் நரேன்.
அவர் இரண்டாவது படமாக இயக்கிய படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள அப்படம் பல்வேறு சிக்கல்களால் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அவர் இயக்கிய மூன்றாவது படமான ‘மாஃபியா’ வெளிவந்துவிட்டது.
தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு தமிர்நாட்டில் உள்ள பல ஊர்களின் பெயரை தமிழின் ஒலி வடிவ உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுத்து மாற்றம் செய்து வெளியிட்டது.
அதில், கோயம்புத்தூர் என்பது இதற்கு முன் ஆங்கிலத்தில் 'Coimbatore' என்று எழுதப்பட்டு வந்ததை ‘Koyampuththoor' என்று மாற்றப்பட்டுள்ளது. அதை சில கோயம்புத்தூர் வாசிகள் கிண்டலடித்து வருகிறார்கள். ஆனால், ஆங்கில எழுத்தில் அப்படி மாற்றப்பட்டிருப்பது சரியான ஒன்றுதான்.
அதைப் பற்றிக் கிண்டலடிக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் , ‘Koyampuththoor அடப் பாவிகளா’ என்றும், ‘நரகாசுரன்’ பெயர் மாற்றம் வேலை செய்கிறதா பார்ப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ‘நரகாசூரன்’ படத்தை ஆங்கிலத்தில் இதுவரை 'Naragasooran' என்றுதான் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு வந்தார். அதை இப்போது 'Narakasuran' என்று மாற்றி எழுதியுள்ளார் கார்த்திக் நரேன்.
‘நரகாசுரன்’ எனப் பெயர் மாற்றினாலும் அப்படம் தியேட்டரில் வருமா, ஓடிடி தளத்தில் வருமா, அல்லது வருமா என்பது இனிமேல்தான் தெரியும்.