மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ பட ஃபர்ஸ்ட் லுக்!!

மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி – மோகன்லால் கூட்டணியில் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் படத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. 

ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் கதை மற்றும் பின்னணி குறித்து ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாயின. அவை வதந்திகள் என்றும், 'மலைக்கோட்டை வாலிபனி'ன் கதை அதுவல்ல என்றும், படத்தின் தயாரிப்பாளர்கள் இதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளித்துள்ளனர்.

லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வரும் முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்திற்கு, தீபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

Read Previous

சமுத்திரக்கனி நடிக்கும் “விமானம்”!

Read Next

உதயமாகிறது ”எம்.எஸ்.எஃப்” என்ற புதிய ஓடிடி தளம்!