யஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்சிக்’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார் யஷ். இதனை கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் நயன்தாரா, கைரா அத்வானி, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் யஷுடன் நடிக்கவுள்ளனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு இந்தியாவில் தொடங்கி இருக்கிறார்கள். இதில் யஷ் – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இருவரும் அண்ணன் – தங்கையாக நடித்து வருகிறார்கள். இதனை முடித்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் லண்டன் செல்லவுள்ளார்கள்.
அங்கு சுமார் 150 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவு பெறுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி படத்தினை வெளியிட உள்ளார்கள். ‘டாக்சிக்’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையுமே லண்டனில் தான் படமாக்கவுள்ளார்கள்.
‘டாக்சிக்’ படத்தினை முடித்துவிட்டு முழுமையாக ‘ராமாயணம்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் யஷ். இதில் ராவணனாக நடிப்பது மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் யஷ் பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.