த வெர்டிக்ட் - விமர்சனம்

01 Jun 2025

அமெரிக்க மண்ணில் நடக்கும் கதை. எலிசா (சுஹாசினி) என்ற வயதான பணக்காரப் பெண் மர்மமான முறையில் இறக்கிறார். அவரது இறப்புக்குப் பிறகு, அவரது நெருங்கிய நட்பில் இருக்கும் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்) முதல் சந்தேக நபராக கைது செய்யப்படுகிறாள். வழக்கின் சிக்கலான தன்மையை உணர்ந்த வக்கீல் மாயா (வரலட்சுமி சரத்குமார்) இந்த வழக்கை ஏற்கிறார். ஆனால் இந்த வழக்கு எவ்வளவு சிக்கலானது என்பதை அவர் புரிந்து கொண்டு, நம்ருதாவிற்க விடுதலை பெற்றுத் தர வாதாடுகிறார்.

படம் அவ்வப்போது நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. தனிமையில் வாழ்ந்த எலிசா, தற்செயலாக நம்ருதாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே வளரும் உறவு ஒரு அம்மா-மகள் போன்ற நெருக்கமாக மாறுகிறது. இந்த நெருக்கத்தின் விளைவாக, எலிசா தனது பல மில்லியன் டாலர் சொத்தில் பெரும் பங்கை நம்ருதாவின் பெயரில் எழுதி வைக்கிறார். ஆனால் எலிசாவின் திடீர் மரணத்திற்குப் பிறகு, இந்த உயில் மாற்றமே நம்ருதாவுக்கு எதிரான சாட்சியாக மாறுகிறது.

நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை ஒவ்வொரு காட்சியும் ஒரு புதிராக அமைகிறது. மாயாவின் கூர்மையான கேள்விகள், சாட்சிகளின் முரண்பாடான பதில்கள், திடீர் திருப்பங்கள் அனைத்தும் பார்வையாளரை முடிவு வரை உட்கார வைக்கின்றன. இறுதியில், எலிசாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது, நம்ருதா உண்மையில் குற்றவாளியா? இல்லை அதற்குப் பின் வேறு யாரோ இருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது.

ஸ்ருதி ஹரிஹரன் இந்த படத்தில் ஒரு முழுமையான நடிகையாக தன்னை நிரூபித்துள்ளார். அவரது கண்களில் தெரியும் உணர்ச்சிகள், குறிப்பாக எலிசாவுடனான காட்சிகளில், இதயத்தைத் தொடுகின்றன. சுஹாசினி மணிரத்னம் தனது அனுபவத்தைக் கொண்டு எலிசாவின் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ஒரு பரபரப்பூட்டும் வக்கீலாக புரியும்படி பேசி இயல்பாக நடித்திருக்கிறார். அவரது நீதிமன்ற காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக உள்ளன.

தொழில்நுட்ப அம்சங்களில் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு சர்வதேச தோற்றத்தை அளிக்கிறது. நீதிமன்ற காட்சிகள் மற்றும் ப்ளாஷ்பேக் காட்சிகள் இரண்டும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. ஆதித்யா ராவின் பின்னணி இசை படத்தின் மர்மம் மற்றும் பரபரப்பை கூட்டுகிறது.

கிருஷ்ணா சங்கர் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவில் அரிதாக காணப்படும் ஒரு முழுமையான நீதிமன்ற த்ரில்லர். கதை ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் அது ஒரு திகில் நிறைந்த பயணமாக மாறுகிறது. நீதிமன்ற விசாரணையின் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

"தி வெர்டிக்ட்" என்பது ஒரு மறக்க முடியாத நீதிமன்ற மர்மப் படம். சிறந்த நடிப்பு, அழகான ஒளிப்பதிவு மற்றும் பரபரப்பூட்டும் கதை ஆகியவை இதை ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக மாற்றுகின்றன. தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. படம் முழுவதும் நீதியின் தேடலில் ஈடுபடும் இந்த பயணம், பார்வையாளர்களின் மனதில் நிலைத்திருக்கும்.

Tags: the verdict, varalaxmi sarathukumar, sruthi hariharan

Share via: