பேரன்பும் பெருங்கோபமும் – விமர்சனம்

05 Jun 2025

ஆணவக் கொலை பற்றி வந்துள்ள மற்றுமொரு திரைப்படம். மாநிலம் கடந்து வந்தாலும் இருக்கும் சாதித் திமிரை பதிவு செய்திருக்கிறார்கள்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தலைமை நர்ஸ் ஆக இருக்கிறார் விஜித் பச்சான். மருத்துவமனையில் நடக்கும் ஊழலைப் பற்றி அவர்தான் பத்திரிகைக்கு சொல்லியிருப்பார் என டீன் நினைக்கிறார். அதனால், அரசியல்வாதி மைம் கோபியிடம் தரும் அழுத்தத்தில் விஜித் கைது செய்யப்படுகிறார். அவரை விசாரிக்கும் உதவி கமிஷனரிடம் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையிலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறார் விஜித். அவரது ஊரில் நடந்த ஆணவக் கொலைகள், கேரளாவில் அவருடைய காதல், அவர் சந்தித்த இழப்பு, அவர் செய் குழந்தைகள் மாற்றம் என பல திடுக்கிடும் சம்பவங்களைச் சொல்கிறார். அவற்றிற்கான முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு படத்தை இயல்பாக நகர்த்த உதவியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஜித் மூன்று வெவ்வேறு காலகட்ட தோற்றங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் வயதான தோற்றத்தில் அவருடைய நிதானம், தீர்க்கமான முடிவு கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

அவரது கேரள காதலியாக நடித்திருக்கும் ஷாலி நிவெகஸ் அழகான அறிமுகம். தனது தாய்மாமனால் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியிருக்குமோ என்ற பதைப்பிலேயே இருக்கிறார். அவரைக் காப்பாற்றி தன்னுடனேயே அழைத்து வருகிறார் விஜித். அன்பான கணவன், மனைவியாக வாழும் இவர்களுக்கு ஷாலிக்கு நடத்தப்படும் ஒரு கொடுமை நம்மை அதிர்ச்சியடைய வைக்கும்.

ஊரில் சாதாரண சாதி வெறியர்களாக இருந்து அரசியலில் பவர்புல்லாக வலம் வருபவர்களாக மைம் கோபி, அருள்தாஸ். சாதி வெறியை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்கள். விஜித் அம்மாவாக சாதி வெறி பிடித்த பெண்கள் இருக்கிறார்களா என்பதும் அதிர்ச்சியாகவே உள்ளது.

இளையராஜா இசையில் கதைக்கேற்ற விதத்தில் பாடல்களும், பின்னணி இசையும் அமைந்துள்ளன. பெரியகுளம், மாஹே உள்ளிட்ட இடங்களில் நடக்கும் கதையில் தினேஷ்குமாரின் ஒளிப்பதிவும் குறிப்பிட வைக்கிறது.

இயக்குனர் சிவபிரகாஷ், சாதிய வன்கொடுமை எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை இந்தப் படம் மூலம் காட்டியிருக்கிறார். மாநிலம் கடந்து வந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான வன்மம் இருக்கிறது என்பது அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கிறது.

கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பு, படத்தின் மீது நமக்கும் பேரன்பும், அதில் உள்ள சில சாதி வெறி கதாபாத்திரங்களின் மீது பெருங்கோபத்தையும் வரவழைக்கிறது.

Tags: peranbum perungobamum

Share via: