மூன்று கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் ‘டெஸ்ட்’ - இயக்குனர் சசிகாந்த்
16 Mar 2025
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் பல தனித்துவமான கதைகளை திரைப்படங்களாக தயாரித்து வரும் தயாரிப்பாளர் சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘டெஸ்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் படம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “நான் இயக்குநராக வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளராக மாறினேன். படம் இயக்க வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக என்னுள் இருந்தது. அதனால், நான் பணியாற்றிய படங்களில் இருந்தே கதை சொல்லல், காட்சி அமைப்பு போன்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன். 12 வருடங்களுக்கு முன்பே ‘டெஸ்ட்’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். ஆனால், ஒவ்வொரு முறையும் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் போது, படம் தயாரிப்பில் ஈடுபட்டுவிடுவதால், இயக்க முடியாமல் போய்விடும். கொரோனா காலத்தில் கிடைத்த நேரத்தில் தான், இந்த முறை நிச்சயம் படம் இயக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, மீண்டும் இந்த கதையை எழுதத் தொடங்கினேன்.
‘டெஸ்ட்’ என்பது கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்த படம் அல்ல. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு பதில் காணும் தருணம் ஒன்று வரும். அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதையை இந்த படம் சொல்கிறது. நம்மால் இது முடியுமா? என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. ஆனால், அதை செய்வதற்கு நாம் தயக்கம் காட்டுவோம். ஆனால், வாழ்க்கையில் ஒரு சோதனைக்காலம் வந்தால், அதில் இருந்து விடுபடுவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் நாம் யார் என்பதை நமக்கே புரிய வைக்கும். அப்படிப்பட்ட மூன்று கதைகளை இந்த படம் பேசுகிறது.
சித்தார்த், மாதவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு வாழ்க்கையில் ஒரு சோதனை வருகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. சித்தார்த் மற்றும் நயன்தாராவிடம் இந்த படம் பற்றிய யோசனையை சொன்ன உடனேயே அவர்கள் நடிக்க சம்மதித்துவிட்டார்கள். மாதவன் மட்டும் பல சந்தேகங்களை எழுப்பினார். அவரது சந்தேகங்களுக்கு ஏற்ப திரைக்கதையை பல முறை மாற்றியமைத்து, இறுதியாக அவருக்கு அளித்த திரைக்கதையை படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார்.
சித்தார்த் இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார். அவரது துறையில் அவருக்கு வரும் சோதனையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது போல், மாதவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கும் சில சோதனைகள் வருகின்றன. அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை இந்த படம் பேசுகிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது போலவே கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒடிடி தளத்தில் நேரடியாக படத்தை வெளியிடுவதற்கு காரணம், உலக அளவில் இந்த படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக. படம் வெளியான உடன், நெட்பிளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் இந்த படத்தை பார்ப்பார்கள். அப்போது படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான் ஒடிடியில் வெளியிட முடிவு செய்தோம்.
படத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருந்தாலும், அதன் மூலம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறோம். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கதை சொல்லவில்லை. அதே சமயம், கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தும் போது சினிமாத்தனமாக அல்லாமல், வழக்கமாக கிரிக்கெட் போட்டியை ஒளிப்பதிவு செய்யும் பிராட்கேஸ்டிங் கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதனால், அந்த காட்சிகளை பார்க்கும் போது கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் உணர்வு ஏற்படும். இதற்காக பிரத்யேக குழு ஒன்றை வைத்து படமாக்கியிருக்கிறோம்.
சித்தார்த்துக்கும் எனக்கும் கிரிக்கெட் மீது ரொம்பவும் பிடிப்பு உண்டு. இந்த படத்திற்காக சித்தார்த் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். நயன்தாரா இந்த படத்திற்காக முதல் முறையாக சொந்த குரலில் பேசியிருக்கிறார். லைவ் ரெக்கார்டிங் மூலம் வசனங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், நடிகர்கள் அனைவரும் ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்பு அதில் எப்படி செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதில் முழுமையான தயார் நிலையில் இருப்பார்கள். மூன்று பேருமே இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். அதேபோல், மீரா ஜாஸ்மின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும். அவரது கதாபாத்திரம் விளம்பரத்தில் இடம்பெறாது, ஆனால், படத்தில் மிக முக்கியமான பங்கு உண்டு, அது படம் பார்க்கும் போது தெரிய வரும்.
கதை சொல்லல் மற்றும் இயக்குநரை தாண்டி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களது பணியின் மூலம் படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏதோ இசையமைத்தேன் என்று இல்லாமல், தன் இசையின் மூலம் இந்த கதையை ரசிகர்களிடம் எப்படி கொண்டு சேர்க்க முடியும் என்ற ரீதியில் பணியாற்றியிருக்கிறார். அவரைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருப்பதால், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்.
Tags: test, sashikanth, nayanthara, madhavan, sidharth, meera jasmine