‘துப்பறிவாளன் 2’ இயக்குவது ஏன் ? - விஷால்
12 Mar 2020
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் ‘துப்பறிவாளன்2’.
படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னதாக , அப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷாலுக்கு மிஷ்கின் திடீரென சில நிபந்தனைகளை விதித்தார். அதற்கெல்லாம் சம்மதித்தால்தான் படத்தைத் தொடருவேன் என்றார்.
அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பதும் வெளியானது. அதற்கு விஷால் அவருடைய விளக்கத்தை அளித்துளளார்.
“கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா ?. UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக் காட்டியவை தவறா ?.
ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா ?.
இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் VFF அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா?
புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம்.
மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்படத் தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதி செய்கிறேன்.
இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே.
இது ஒரு பொது கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே வெளியிடுகிறேன்.
இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்,” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
அதோடு, நேற்று மாலை படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டார்.
உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்து, பல படங்களில் நாயகனாக நடித்து, இப்போது இயக்குனராக அறிமுகமாகும் விஷாலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags: thupparivaalan 2, vishal, ilaiyaraaja