கைவிடப்பட்டதா ரன்வீர் சிங் – பிரசாந்த் வர்மா திரைப்படம்?
21 May 2024
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’ஹனுமான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரபல இயக்குநராக வலம் வருகிறார் பிரசாந்த் வர்மா. இவருடைய இயக்கத்தில் நடிக்க ரன்வீர் சிங் ஆர்வம் காட்டினார். இதனைத் தொடர்ந்து இருவரும் சந்தித்து கதைவிவாதம் செய்து, கூட்டணியை உறுதிப்படுத்தினார்கள். இந்தக் கூட்டணி படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.
பிரசாந்த் வர்மா – ரன்வீர் சிங் கூட்டணியை அறிவிக்க, சில காட்சிகளை படமாக்கி ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார்கள். ஆனால், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரசாந்த் வர்மா – ரன்வீர் சிங் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முழுக்க மனைவி தீபிகா படுகோன் உடன் நேரத்தை செலவழிக்க ரன்வீர் சிங் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக ரன்வீர் சிங் நடிப்பில் ‘டான் 3’ மற்றும் ‘சக்திமான்’ ஆகிய படங்கள் உருவாக இருக்கிறது.
Tags: ranveer singh, prasanth varma