கலர்ஸ் தமிழ் - ‘கன்னித் தீவு, உல்லாச உலகம் 2.0’ புதிய நகைச்சுவை நிகழ்ச்சி

31 Jul 2021

கலர்ஸ் தமிழ் டிவியில் நாளை ஆகஸ்ட் 1 முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ‘கன்னித்தீவு - உல்லாச உலகம் 2.0’. 

நக்கலும் நையாண்டியும் கொண்ட ராஜா ஜல்சானந்தா (நடிகர் ரோபோ சங்கர்) என்பவரின் கன்னித் தீவில் நிகழ்கின்ற பல்வேறு நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்கிறது இந்த நிகழ்ச்சி. 

சிரிப்பின் உச்சத்திற்கே நேயர்களை அழைத்துச் செல்லும் விதத்தில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தீவுக்கு நேரில் சென்று பார்க்க பல நட்சத்திரங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், நாளை ஒளிபரப்பாக உள்ள முதல் எபிசோடில், நடிகை வரலட்சுமி சரத்குமார் கன்னித்தீவுக்கு பயணித்துள்ளார். 
 
பிரம்மாண்ட அமைப்பை கொண்டிருக்கும் இந்த ‘கன்னித்தீவு’, ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சி. நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.  ஒவ்வொன்றும் மற்றொன்றை விட கூடுதல் கேளிக்கையை தருவதாக இருக்கும்.  பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கருடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் தமிழ் தொலைக்காட்சிகளைச் சேர்ந்த புகழ் பெற்ற நடிகர், நடிகைகளும் இடம்பெறுகின்றனர்.  

பேபி மாதா என்ற பெயரில் ஒரு புதிய அவதாரத்தை நடிகை ஜாங்கிரி மதுமிதா இதில் எடுத்திருக்கிறார்.  பிரபல நடிகை ஷகீலா ராஜமாதாவாக நடித்திருப்பது இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் உற்சாகத்தை உருவாக்கும்.  

ஒவ்வொரு ஞாயிறன்றும் நடைபெறுகின்ற இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணனும், R & D பிரிவின் விஞ்ஞானிகளாக பிரபல காமெடி இரட்டையர்கள் முல்லை மற்றும் கோதண்டம் ஆகியோரும் மேலும் ராஜாவை குதூகலப்படுத்தும் கதாபாத்திரத்தில் அமுதவாணனும் இணைந்து கலக்கல் காமெடியை வழங்க உள்ளார்களாம். 
 
இந்நிகழ்ச்சி பற்றி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தகத் தலைவர் அனூப் சந்திரசேகரன் கூறுகையில்,  

“கன்னித் தீவு – உல்லாச உலகம் 2.0 – ஐ தொடங்குவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம்.  காமெடி உலகில் மக்கள் மனம் கவர்ந்த பிரபல நடிகர்கள் பெரும்பாலானோர் இந்நிகழ்ச்சியில் இணைந்திருப்பதால், தமிழ் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி தளத்தில் ஒரு புதிய பாதையை இந்நிகழ்ச்சி நிச்சயம் அமைக்கும்.  

புத்துணர்ச்சியூட்டுகின்ற மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்குவது என்ற எங்களது நோக்கமே இத்தகைய புதுமையான மற்றும் சிறப்பான சிந்தனையில் உதயமாகின்ற நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. ராஜா ஜல்சா மற்றும் அவரது தீவின் குடியிருப்புவாசிகள், இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய உடனேயே அனைத்து இல்லங்களிலும் தினசரி உச்சரிக்கும் நபர்களாக மாறிவிடுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறுகிறார்.
 
இந்நிகழ்ச்சி ரோபோ சங்கர் கூறுகையில், 

“கலர்ஸ் தமிழ் போன்ற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட தொலைக்காட்சியில் எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  ‘கன்னித்தீவு’ என்ற இந்த ஐடியா மிக தனித்துவமானதும், புதுமையானதுமாக இருக்கிறது.  

இதில், ராஜா ஜல்சானந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்கிறது.  திறமைமிக்க பல நடிகர்களோடு சேர்ந்து பணியாற்றுவது இன்னும் சிறப்பான உணர்வைத் தருகிறது.  சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு இந்நிகழ்ச்சி இருக்கப்போகிறது.  மிகவும் சிரத்தையோடு நாங்கள் பணியாற்றி வந்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியை எமது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதற்கு வெகு ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்,” என்கிறார். 
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 1, ஞாயிறு இரவு 7 மணி முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0 கண்டு உற்சாகத்தில் திளைக்க தயாராகுங்கள்.  

Tags: colors tamil, colors tamil tv, colors tv, kanni theevu ullasa ulagam 2.0, kanni theevu

Share via: