என் மகளுடன் நடித்தது நல்ல அனுபவம் - அருண் பாண்டியன்
01 Mar 2021
எ அன்ட் பி குரூப்ஸ தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில், அருண்பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வரும் மார்ச் 5ம் தேதி வெளியாக உள்ள படம் ‘அன்பிற்கினியாள்’.
பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்கு இப்படம் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்..
நடிகர் அருண்பாண்டியன் பேசும் போது,
"அன்பிற்கினியாள்’ படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம்.
நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிகச் சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப் படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.
இந்தப் படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
இயக்குநர் கோகுல் பேசியதாவது,
"இந்தப் படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்துச் செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப் படத்தின் மலையாள வெர்சனைக் காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப் போனதால் அருண்பாண்டியன் சாரிடம் படத்தை நானே இயக்குகிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
கீர்த்தி பாண்டியன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப் படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறது. எங்களுக்கு இந்தப் படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பாட்டிலே அவர் நிறைய முறை கைத்தட்டல் வாங்கினார். அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார்.
ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தில் எல்லாப் பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார்.
மீடியா எப்போதும் நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியதே இல்லை. இந்தப் படத்தையும் மக்களிடம் மீடியா சரியாகக் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில்,
"இந்தப் படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்திற்காக ப்ரீசரில் மைனஸ் டிகிரியில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்," என்றார்.
நடிகர் பிரவின் பேசியதாவது,
"எனக்கு இந்தப் படம்தான் என் கரியரின் ஆரம்பம். எனக்கு வாய்ப்பளித்த அருண்பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். கீர்த்தி பாண்டியன் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்," என்றார்.
இசை அமைப்பாளர் ஜாவித் பேசியதாவது,
"இந்தப் படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாகச் சொன்னார்கள். அருண்பாண்டியன் சாரும் கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் தான் அதற்குக் காரணம்.. இந்தப் படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
Tags: arun pandian, keerthi pandian, gokul, anbirkiniyal