பெரிய தியேட்டர்களில் ’36 வயதினிலே’…
21 May 2015
ஜோதிகா 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ’36 வயதினிலே’. இந்தப் படத்திற்கு பெண் ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதையடுத்து நாளை முதல் பெரிய தியேட்டர்களுக்கு மாற்றப்படுகிறது.
இது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “36 வயதினிலே’ படத்தை தமிழ்நாடு முழுவதும் 210 தியேட்டர்களில் வெளியிட்டோம். இதுவரை 7 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இப்படியே தொடரும் பட்சத்தில் சுமார் 18 முதல் 20 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக வந்த இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை முதல் இந்தப் படம் பல ஊர்களில் பெரிய தியேட்டர்களுக்கு மாற்றப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளனர்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தாய்மார்கள் ஆதரவு கிடைத்திருப்பது தமிழ்த் திரையுலகத்திற்கு பெரிய திருப்பு முனை என திரையுலகத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

