45 புதுமுகங்களுடன் ‘சூரத் தேங்காய்’
28 Nov 2015
மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என். முத்துக்குமார் தயாரிப்பில் 'தென்னிந்தியன்', 'சூரத்தேங்காய்' படங்களின் ஆடியோ வெளியீடு மற்றும் அறிமுகவிழா நடைபெற்றது.
விழாவில் பாடல்களை வெளியிட்டு கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது,
"இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன். 'கோலி சோடா' சின்னபடம்தான். அது 40 கோடி லாபம் சம்பாதித்தது. சிறு படங்கள் வர வேண்டும் . சில படங்களில் நடித்துள்ள 'சூரத் தேங்காய்' நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார். அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை.
இங்கே இதைப் பேசக்கூடாது என்றிருந்தேன், ஆனால் பேசவேண்டியிருக்கிறது. ஆந்திராவில் புயல்,வெள்ளம் வந்த போது எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன் .இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். நம் தமிழ்நாட்டில் நடிகர்கள் யார் எவ்வளவு கொடுத்தார்கள் ?, ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை ?. தயவு செய்து கொடுத்து உதவுங்கள் நீங்களும் உயர்வீர்கள்.
எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறுபடங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். எப் எம் எஸ் என்கிற வகையில் 120 நாடுகளுக்குப் நம் படங்கள் போகின்றன. ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இது மாற நடவடிக்கை எடுப்போம்," என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் முத்துக்குமார் பேசும்போது
"இந்த விழாவே எங்களுக்கு வெற்றி விழா தான். நான் இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கு ஏன் படம் தயாரிக்கும் வேண்டாத வேலை என்று கேட்டார்கள். சின்ன வயதில் குழந்தை நடனம் ஆடும்போது அம்மா கை தட்டுவாள். கலை எல்லாருக்கும் மனசுக்குள் இருக்கும்.
சினிமாவுக்குவரத் தனித் தகுதி தேவையா ? உலக உருண்டை தெரியாதவர்களுக்கும் ஏவிஎம் உருண்டை தெரியும், அப்படிப்பட்டது சினிமா ஆர்வம். நான் 1983ல் 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' போன்ற சில படங்களில் நடித்தேன்.
வெளிநாடு போனேன், தற்காப்புக் கலை கற்றேன். 5 வகை நடனம் கற்றேன். தேசிய அளவில் விருது கூட பெற்றேன். 12 ஆண்டுகள் 3 படங்களுக்கு இணை தயாரிப்புப் பணி , ஐந்து படங்களில் தயாரிப்பில் என பங்கு பெற்றுள்ளேன்.
இளையராஜா சாரை வைத்து கூட படம் தயாரிக்கிறேன். இப்படி எனக்கும் சினிமா அனுபவம் உள்ளது. பணம் இருந்தால் மட்டும் படம் தயாரிக்க முடியாது. சினிமா அனுபவமும் தேவை. இந்த 'சூரத் தேங்காய்' நேரடித் தமிழ்ப்படம். 'தென்னிந்தியன் ' மலையாளத்தில் வெற்றி பெற்ற படம், இரண்டையும் தயாரித்துள்ளேன். வெற்றி பெற ஆதரவு தாருங்கள்," என்றார்.
'சூரத்தேங்காய்' பட இயக்குநர் சஞ்ஜிவ் ஸ்ரீநிவாஸ் பேசும் போது
"பிரபுதேவா, லாரன்ஸ், சிவசங்கர் போன்ற மாஸ்டர்களிடம் 200 படங்களில் நடன உதவி இயக்குநராக பணியாற்றியவன். சுமார் 50 படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவன். ‘சூரத்தேங்காய்' படத்தில் 45 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
தயாரிப்பாளர் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் விரைவில் படத்தை முடித்தேன், அனைவருக்கும் நன்றி ''என்றார்.
விழாவில் நாயகன் குரு அரவிந்த், நாயகி சமந்தி, நடிகர்கள் பவர் ஸ்டார், வேல்முருகன், செல்வதுரை, ஒளிப்பதிவாளர் ஹரர்முக், பாடலாசிரியர் நலன் கிள்ளி, ஆகியோரும் பேசினார்கள்.