ஏப்ரல் 7, 2027ல் ‘வாரணாசி’ வெளியீடு

30 Jan 2026

இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. 

ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ், மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் சார்பில்  K.L. நாராயணா மற்றும் S.S. கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கும்,  இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு முன்னோட்டம் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. காலத்தையும்,  நில பரிமாணங்களையும் கடந்து செல்லும் காட்சித் தொகுப்பாக,  திரேதாயுகம் தொடங்கி, கி.பி. 512-ம் ஆண்டு  வாரணாசி, அதன்பின் கி.பி. 2027, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, வனாஞ்சல் எனப் பல பரிமாணங்களைத் தொட்டு, மீண்டும் திரேதாயுகம் (கிமு 7200) வரை பயணிக்கிறது. மர்மமான ஒரு பணிக்காகப் பயணிக்கும் ருத்ரா என்ற கதாபாத்திரத்தின் சக்திவாய்ந்த அறிமுகத்துடன் முன்னோட்டம் இருந்தது.

வித்தியாசமான, அதிரடி விளம்பர யுக்திகளுக்குப் பெயர் பெற்ற எஸ். எஸ். ராஜமௌலி, இப்படத்தின் விளம்பர முன்னோட்டங்களை துவங்கியுள்ளார். 

நேற்று, வாரணாசி நகரம் முழுவதும் திடீரென தோன்றிய வெளியீட்டு தேதி பேனர் போஸ்டர்கள், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறின. இதனைத் தொடர்ந்து இன்று, படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு உள்ளிட்ட முழு படக்குழுவும், கண்கவர் புதிய போஸ்டருடன் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, ‘வாரணாசி’ திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தை தனது கனவுப் படம் என வர்ணித்துள்ள மகேஷ் பாபு, இப்படம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தும் படமாக அமையும் என்று  நம்பிக்கை  தெரிவித்துள்ளார் . தற்போது இப்படத்தின்  படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  ”குளோப்ட்ராட்டர் ( Globetrotter) “( உலகம் சுற்றும் பயணி ) மற்றும் “டைம் ட்ராட்டர்” (Timetrotter)( காலம் தாண்டும் பயணி) என்ற டேக் லைனுடன் உருவாகி வரும், ‘வாரணாசி’ இந்தியாவை மட்டுமல்லாது, சர்வதேச சினிமா அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது

Tags: varanasai

Share via: