என் வாழ்வில் மிக முக்கியமான படம் ‘தலைவி’ - கங்கனா ரனவத்
05 Sep 2021
வைப்ரி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்க, சைலேஷ் R சிங், திருமால் ரெட்டி, ஹிதேஷ் தக்கர் இணை தயாரிப்பு செய்ய விஜய் இயக்கத்தில் கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தலைவி’.
செப்டம்ப்ர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். கிரியேட்டிவ் புரடியூசர் ஆக பிருந்தா பணியாற்றியுள்ளார். மதன் கார்க்கி வசனம் எழுத, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மறைந்த முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படம் எடுக்கப்பட்டுள்ளது. பட வெளியீட்டிற்கு முன்னதாக படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பேசுகையில்,
“எங்கள் திரைப்படம் இறுதியாக திரைக்கு வருகிறது. 2017லேயே இப்படத்தை எடுக்கும் ஐடியா எங்களுக்கு இருந்தது. ஜெயலலிதா அம்மா நிஜ வாழ்வில் நம்பமுடியாத பல தடைகளைக் கடந்து வந்தவர். அதனை திரையில் அவரது ஆசீர்வாதத்துடன் கொண்டு வந்துள்ளோம். இயக்குநர் விஜய், திரைக்கதை ஆசிரியர் இருவரும் மிக அற்புதமாக திரையில் ஜெயலலிதா அம்மா அவர்களின் வாழ்வைக் கொண்டு வந்துள்ளார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் குழு எங்கள் படத்தில் பணியாற்றியுள்ளது, அர்விந்தசாமி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுடன் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் கங்கனா ரனவத்தும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி, சைலேஷ் R சிங் படம் உருவாக மிகப்பெரிய ஒத்துழைப்பைத் தந்துள்ளார்கள். எங்களின் உழைப்பு இப்போது உங்களின் பார்வைக்கு வருகிறது உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம்.
ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் பேசியதாவது,
புதியவனான எனக்கு இத்தனை பெரிய படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்கள் விஷ்ணு வர்தன் இந்தூரி, சைலேஷ் R சிங் அவர்களுக்கும் நன்றி. படம் அழகாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் பேசுகையில்,
12 வருடங்களாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். தலைவி படத்தில் பல தடைகளை உடைத்து நிஜவாழ்வில் சாதனை படைத்த ஜெயலலிதா அம்மாவை கங்கனா ரனாவத் அழகாக திரையில் கொண்டுவந்துள்ளார். கங்கனா பற்றி கேள்விப்படும் பல விசயங்கள் நிஜத்தில் பழகும்போது மாறிவிட்டது, மிக இயல்பான மனிதர். அவரது கடின உழைப்புதான், நான் அமைத்த பாடலில் தெரிகிறது. ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நானும் பங்காற்றியது மகிழ்ச்சி. வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி.
நடிகை பாக்யஸ்ரீ பேசியதாவது,
இப்படத்தில் நடிக்கக் காரணமாக இருந்த விஜய்க்கு நன்றி. நடிகர்கள் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். கங்கனா ஒரு புதுமுகமாக பாலிவுட்டில் பெரும் தயக்கத்துடன், அவர் நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். இப்போது தலைவியாக அவர் நடிப்பதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. உண்மையில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். என் தோழி மதுபாலாவும் அற்புத நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் மிக அழகான படமாக வந்திருக்கிறது. இப்படத்தில் எனக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாள்ர்களுக்கு நன்றி.
நடிகை மதுபாலா பேசுகையில்,
என் முதல் படம் அழகன் 1991ல் வெளிவந்தது. அந்தப்படத்தின் போது புதுமுகமாக நான் எப்படி உணர்ந்தேனோ அதே உணர்வை, இப்போதும் உணர்கிறேன். அதே போல் மீண்டும் உங்களை திரையில் சந்திக்க வந்திருக்கிறேன். கங்கனா ரனவத் முதன்மை நாயகியாக, ஜெயலலிதா அம்மாவாக அத்தனை தத்ரூபமாக மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அரவிந்த்சாமி மிக அழகனாக எம்.ஜி.ஆராக கலக்கியுள்ளார். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமை.
நடிகர் தம்பி ராமையா பேசியதாவது,
கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டருக்கு ‘மாஸ்டர்’ படம் மக்களை அழைத்து வந்தது. அதே போல் இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை அழைத்து வரும் படமாக ‘தலைவி’ இருக்கும். ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், பெண்களுக்கு முன்னுதாரணமாக வலம் வருகிறார் கங்கனா ரனாவத். அர்விந்த்சாமி எதிரிகளே இல்லாமல் அனைவரும் விரும்பும் நாயகன். அர்விந்தசாமி போல் அழகு எனக்கு இருந்தால் இந்நேரம் நான் ஜெயிலில் இருந்திருப்பேன், அல்லது இறந்திருப்பேன். ஆனால் தன்னடக்கத்துடன் இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள், சல்மானுக்கு ஜோடியாக நடித்த பாக்யஸ்ரீ மேடம், இப்படத்தில் சந்தியா அம்மாவாக நடித்துள்ளார். வெகுஜன மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும் திரையரங்குகளின் பிரச்சனைகளுக்கு, சிறப்பு கவனம் எடுத்து தமிழக அரசு கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமுத்திரக்கனி ஆர் எம் வீரப்பனாக மிக அற்புதமாக செய்துள்ளார். ஜெயலலிதா அம்மா வாழ்வில் யாரும் அறியாத மாதவன் பாத்திரத்தை எனக்கு இயக்குநர் தந்துள்ளார். உஙகளுடன் இணைந்து படத்தைப் பார்க்க நாங்களும் ஆவலாக உள்ளோம்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசுகையில்,
கடந்த மாதம் எனது அம்மாவை கோவிட் நோயில் இழந்தேன். இந்தப் படத்தில் வேலை செய்ததை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, எல்லா படத்தைக் காட்டிலும் இப்படம் அதிக புகழை பெற்றுத் தரும் என்றார், அதை இப்போது உணர்கிறேன். இந்தப் படத்தைப் பற்றி முதன்முதலாக இயக்குநர் விஜய் என்னிடம் கூறிய போது, இது அத்தனை எளிதானதல்ல, நிறைய பிரச்சனைகள் வரும் என்றேன். ஆனால் நாம் செய்வோம் என்றார். திரையில் மிக அற்புதமாக அதை எடுத்து வந்துள்ளார். எங்களை விட அதிகமாக ஜெயலலிதா பற்றி தயாரிப்பாளர்களுக்குத் தெரியும். மிக ஆர்வத்துடன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். நாசர் சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு பிடித்த நடிகராக அர்விந்த்சாமியை கூறினார். எனக்கு இப்படத்தில் அவரை பார்த்தபோது அதனை நானும் உணர்ந்தேன். கங்கனா ரனவத் நடிப்புத் திறமையை பல திரைப்படங்களில் கண்டிருக்கிறோம், இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக வாழ்ந்துள்ளார். இப்படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாடகி சைந்தவி பேசியதாவது,
சகோதரர் இயக்குநர் விஜய்யை பல வருடங்களாகத் தெரியும். இந்தப் படத்தில் நான் பாடியே ஆக வேண்டும் என்று சொன்னது அவர் தான். ஜீவியும் நானும் இணைந்து வேலை செய்ய வேண்டாம் என பேசி வைத்திருந்தோம். அதனை ‘மதராசபட்டிணம்’ படத்தில் மாற்றியவர் விஜய் தான். இந்தப் படத்தில் நான் பாடிய பாடல் என் வாழ்வில் மிகவும் முக்கியமான பாடல், எனக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத்தரும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் அரவிந்த் சாமி பேசுகையில்,
இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கும் என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்தான் படம் பார்த்தேன். ஒரு மாஸ்டர் க்ளாஸ் மாதிரிதான் இருந்தது. கங்கனா, நாசர், மதுபாலா, சமுத்திரக்கனி இவர்களுடன் நான் ஏதோ செய்திருக்கிறேன் என்றுதான் தோன்றியது. ஏனெனில் அனைவரது நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் விஜய்யுடைய டீடெயிலிங், திரையில் காட்சிகளில் அவரது நுணுக்கம், பிரமிப்பாக இருந்தது. இப்படம் தியேட்டரில் வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள். இத்திரைப்படம் ஒரு அற்புதம். இந்தியாவெங்கும் இப்படத்தை ரசிப்பார்கள். இப்படத்தில் அனைவருமே சிறப்பான பணியைஙம தந்துள்ளார்கள். ஆனால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ஜீவியின் இசை தான். அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும், காட்சிக்கு ஏற்றவாறும் மிகப் பொருத்தமான, பிரமிப்பான இசையை வழங்கியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
நடிகை கங்கனா ரனவத் பேசியதாவது,
இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்துள்ளோம். இப்படத்தை பல தடைகளைக் கடந்து திரையரங்கிற்கு கொண்டு வந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது பெருமை. மதுபாலா மேடம் என் மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள். அர்விந்த்சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளைக் கேட்டறிந்தேன். சமுத்திரக்கனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை, ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம், இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி, உங்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி பேசுகையில்,
நாங்கள் முதன்முதலில் சென்னையில் டிரைலரை வெளியிட்டபோது இந்தியாவே திரும்பிப் பார்த்தது. ஓடிடியில் இருந்து பலரும் மிகப் பெரும் தொகைக்கு படத்தைக் கேட்டபோதும் திரையில் இப்படத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் விஜய் தவிர வேறு எவரும் இத்தனை கச்சிதமாக இப்படத்தை இயக்கியிருக்க முடியாது. கங்கனா ரனவத், அர்விந்த்சாமி, சமுத்திரக்கனி என அனைவரும் மிகப் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். இப்படம் இந்திய அளவில் அனைவருக்கும் பிடிக்கும்.
இயக்குநர் விஜய் பேசியதாவது,
இப்படம் எனது கனவல்ல, என்னுடைய குழுவினரின் கனவு. இந்தக் கனவு நனவாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. திரையரங்கில் படத்தைக் கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஜிவி இதில் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இந்தப் படத்தின் ஆத்மாவே அவர்தான். விட்டல் நம் வீட்டு பையன், மும்பையில் செட்டிலானவர். இப்படத்தில் அருமையான பணியைத் தந்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். அர்விந்த்சாமி வரலாற்று சிறப்பு மிக்க நடிப்பைத் தந்துள்ளார். இந்தப் படத்தில் நிறைய இயக்குநர்கள் நடித்துள்ளார்கள், அவர்களை இயக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. கங்கனாவிற்கு முழு திரைக்கதையும் தெரியும், ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகப்பெரிய படைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம், நன்றி.
Tags: thalaivi, aravind swamy, gv prakashkumar, kangana ranaut, al vijay, jayalalitha, nasser,