தாமதமாகிறது சூர்யாவின் இந்திப் படம்: ‘வாடிவாசல்’ தொடங்குப்படுமா?
28 Jun 2024
சூர்யாவின் இந்திப் படமான ‘கர்ணன்’ தாமதமாகிறது. இதனால், ‘வாடிவாசல்’ பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு இந்திப் படத்துக்கு தேதிகள் ஒதுக்குவார் என்று கூறப்பட்டது.
தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. என்னவென்றால், சூர்யா நடிக்கவிருந்த இந்திப் படமான ‘கர்ணன்’ தொடங்க தாமதமாகிறது. படத்தின் பொருட்செலவைக் குறைக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் இதன் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தான் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால், ‘கர்ணன்’ படத்துக்குக் கொடுக்கப்பட்ட தேதிகளில் ‘வாடிவாசல்’ படத்தினைத் தொடங்கிவிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக சூர்யா - வெற்றிமாறன் இருவரும் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்கள். ‘விடுதலை 2’ படப்பிடிப்பை மட்டும் முடித்துவிட்டு, இறுதிகட்டப் பணிகளை மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொள்ளலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார் வெற்றிமாறன்.
எதுவுமே இன்னும் உறுதியாகவில்லை. அனைத்துமே பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது. ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு வருகிறார் சூர்யா. அதன்பின்பே இறுதி முடிவு என்ன என்பது தெரியவரும்.
Tags: suriya, vadivaasal