கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

15 Jan 2022

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனம், காட்ப்ளஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளது.

‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார். 

உலக அளவில் பிரபலமான சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மலையாளத்தில் ‘நைன்’ படத்தைத் தயாரித்ததன் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் கால் பதித்தது. அடுத்து தமிழில் படத்தைத் தயாரிக்க களம் இறங்கி உள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51வது படம் இது. படம் பற்றி கமல்ஹாசன் கூறுகையில், “ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதில் பெருமையடைகிறேன்,” என்றார். 

சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் விவேக் கிருஷ்ணானி கூறுகையில்,  
"திரையுலக ஜாம்பவான் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். ராஜ்குமார் பெரியசாமியின் கதை சொல்லும் திறமையாலும், பெரும் ரசிகக் கூட்டத்தின் மனங்களை ஈர்த்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஆற்றல் மிகு நடிப்பினாலும் இப்படம் நிச்சயம் பார்வையாளார்களால் கொண்டாடப்படும். 
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும். தனக்கென தனிச்சிறப்புகள் கொண்ட தமிழ்த் திரையுலகில் இத் திரைப்படத்தின் மூலம் கால் பதிப்பதில் சோனி பிக்சர்ஸ் பெருமையடைகிறது. பிராந்திய மொழிகளின் சினிமாச் சூழலை நன்கு அறிந்த, இந்திய சினிமாவில் கணிசமான தாக்கத்தை உருவாக்கிய திரையுலக ஆளுமைகளோடும், இளம் தலைமுறைகளோடும் அதிகளவில் எங்கள் பணி தொடருமென நம்புகிறோம்,” என்றார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், 

"சிறப்பானதும் புதுமையானதுமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தை இயக்குவதில் பெருமிதம் அடைகிறேன்.  நான் சிறு வயதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன்.  அவர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய நடிப்பு மற்றும் பன்முக திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.  இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.  இந்தப் படத்தை இயக்குவது என் மனதிற்குப் பிடித்த ஒன்று. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

சிவகார்த்திகேயன் கூறுகையில், 

“இந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பது கலவையான பலவித உணர்வுகளை எனக்கு வழங்குகிறது.  உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்திய சினிமாவின் தலை சிறந்த கலைஞர், கலைஞானி.  சர்வதேசத் திரையுலகில் தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்பவர்.  கலைமேதை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சர்வதேச அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதிலும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  இவை அனைத்தும் சாத்தியமாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என் நண்பர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் தான்.  அவருடைய சிறப்பான திரைக்கதையினால் இப்படம் வெற்றியடையும் என உறுதியாக நம்புகிறேன்.  என் சினிமாவாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங்ப ணிகள் எப்போது தொடங்கும் என ஆவலோடு இருக்கிறேன்,” என்றார்.  

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தகவல் மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Tags: sivakarthikeyan, kamalhaasan, rajkumar periasamy

Share via: