ராஜேஷ் – அதர்வா கூட்டணி உருவானது எப்படி?

02 Mar 2024

ராஜேஷ் – அதர்வா கூட்டணி உருவானது எப்படி என்பது தெரிய வந்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘பிரதர்’ படத்தினை இயக்கி வருகிறார் ராஜேஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையே அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ராஜேஷ் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

எப்படி இந்தக் கூட்டணி உருவானது  என்று விசாரித்த போது, பின்னணியில் நடந்தது என்ன என தெரிவித்தார்கள். 

ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று அதர்வா பலமுறை தொலைபேசி வாயிலாக அவரிடமே தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். நேரம் வரும்போது கண்டிப்பாக பண்ணலாம் என்று ராஜேஷும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே மேஜர் ரவி இயக்கத்தில் அதர்வா, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க புதிய படமொன்றின் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. முழுக்க ராணுவ பின்னணியில் உருவாகவிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருந்தது. 

படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு அதர்வா – மேஜர் ரவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டுள்ளது.

ஆனால், தயாரிப்பாளரோ அனைவருக்கும் அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டார். இதனால் அதே கூட்டணியை வைத்துக் கொண்டு வேறொரு படம் பண்ண வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக அதர்வாவும் ராஜேஷிடம் பேசியிருக்கிறார். அவரும் தன்னிடம் உள்ள கதையொன்றை தெரிவித்துள்ளார்.

அந்தக் கதை தயாரிப்பாளர், நாயகன், நாயகி என அனைவருக்குமே பிடித்துவிடவே, படம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது.

Tags: rajesh, atharva

Share via:

Movies Released On July 27