தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், நல்ல திட்டங்களை வைத்துள்ளோம் - முரளி

17 Nov 2020

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட உள்ள 'தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர் வேட்பாளர் ராமசாமி முரளி மற்றும் துணைத் தலைவர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாக்குழு வேட்பாளர்கள் மதுரையிலுள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தலைவர் வேட்பாளர் ராமசாமி முரளி கூறியதாவது.

“தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி நிலை மோசமாக உள்ளது, நிறைய திரைப்படங்கள் திரையிட முதற்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். 

முன்னணி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து இனி தேர்ந்தெடுக்கப்படும் தயாரிப்பாளர்கள் சங்க மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம்.

சிறிய பட்ஜெட் படங்களைத் திரையிடுவதற்கும் பிரச்சனைகள் உள்ளது. இதற்கு தீர்வு காண உள்ளோம். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் தலையீடு கிடையாது.

கடந்த 10 ஆண்டுகளாக VPF கட்டணம் கட்டிய நிலையில் இனி கட்டப் போவதில்லை. நாங்கள் வெற்றிபெற்றால் நலிந்த மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுப்போம்.

ஏராளமான படங்கள் திரையிடாமல்  முடங்கிக் கிடப்பதால் அவற்றை வெளியிட முயற்சி மேற்கொள்வோம்.

ஓடிடி மாற்று ஏற்பாட்டிற்கான தளம் தான்.  திரையரங்குகள் தான் முக்கியம், இன்றைய சூழலில் ஓடிடி சரியானது, தென்னிந்திய சினிமாவில் கார்ப்பரேட் தலையிட வாய்ப்பில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

Share via: