ராம் சரணுக்கு தேசிய விருது பெற்றுத் தரும் ‘பெத்தி’ - சிவராஜ்குமார்

26 May 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பெத்தி’. ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

Tags: peddi, ram charan, shivarajkumar

Share via: