நெட்டிசன்கள் சாடல்: மன்னிப்புக் கோரிய நாகார்ஜுனா
24 Jun 2024
ஹைதராபாத் விமான நிலைய வீடியோ இணையத்தில் வைரலானதால், மன்னிப்புக் கோரினார் நாகார்ஜுனா.
சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குபேரா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
சமீபத்தில் நாகார்ஜுனா, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்தது. அந்தக் காட்சிகளை முடித்துவிட்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் நாகார்ஜுனா, தனுஷ் இருவரும் பயணத்துக்கு தயாரானார்கள். அப்போது இருவரும் விமான நிலையத்தில் பவுன்சர்கள் சூழ நடந்து வந்தார்கள். அங்கிருந்த கடையில் பணிபுரியும் முதியவர் ஒருவர், நாகார்ஜுனாவிடம் புகைப்படம் எடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.
உடனடியாக பவுன்சர்கள் அவரை தள்ளிவிட்டுள்ளார்கள். ஆனால், பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்துக் கொண்டதால் அவர் கீழே விழவில்லை. இது நடப்பதை தனுஷும் பார்த்துவிட்டார். அவரும் எதுவும் சொல்லாமல் நடந்து சென்றுவிட்டார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. மனசாட்சி இல்லாதவர்கள் என்று இருவரையும் நெட்டிசன்கள் சாடினார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக நாகார்ஜுனா தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்த வீடியோ பதிவு என் கவனத்துக்கு வந்தது. இப்படி நடந்திருக்கக் கூடாது. நான் அந்த பெரியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்”
இவ்வாறு நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
Tags: dhanush, nagarjuna, gubera