தமிழ், தெலுங்கில் புதிய படத்தைத் தயாரிக்கும் மஹிந்திரா பிக்சர்ஸ்

17 Sep 2022

மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம், சினிமா ரசிகர்களுக்கு  பொழுதுபோக்கு வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு  புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது.  இந்த நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையைத் தங்களது முதல் தயாரிப்பாக இந்நிறுவனம் தேர்வு செய்துள்ளது. 

வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி  தமிழில் வழங்குகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது,

'வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையைத் தேர்வு செய்துள்ளோம். மேலும், இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்,’ என்றார்.

படத்தை வழங்கும் சாய் கார்த்திக் கூறுகையில்,

“புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன. புதிய இயக்குனர் சின்னாவை பல ஓடிடி நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசைக்கேற்ப இந்தப் படத்தை பெரிய படமாக உருவாக்குகிறோம். அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்,’’ என்றார்.

Tags: mahindra pictures, tamil, telungu

Share via: