ஜெய் பீம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டும், சூர்யா நன்றியும்...
01 Nov 2021
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் பார்த்தார்.
இன்று படத்தைப் பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில், “பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர்
@Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்! படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! #JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்,” எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,
“நேற்றைய தினம் 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவிட்டீர்கள்.
நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்துப் புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதே நேரத்தில், உண்மையை வெளிக்கொண்டுவர இன்னொரு காவல்துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும், மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.
சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு), ஒரு காவல்துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.
அமைதியான, அதே நேரத்தில், அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும், அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.
கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.
இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.
'ஜெய்பீம்' படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துருவைச் சந்தித்தேன். (நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான்). அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது.
காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் சிட்டிபாபு. அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது.
இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான 'ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்", என படத்தை தனது வாழ்க்கையில் நடந்த மிசா கொடுமைகளுடன் நினைவுபடுத்திக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து சூர்யா, “வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags: jai bhim, suriya, tha se gnanavel, sean roldan, Prakash Raj, Rajisha Vijayan, Manikandan, Lijo Mol Jose