மக்கள் ரசிக்கவே தியேட்டர்களில் ‘எனிமி’ - விஷால்
30 Oct 2021
மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் - சாம் சிஎஸ் இசையில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் ‘எனிமி’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நடிகர் விஷால் பேசுகையில்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப் பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை OTT இல் வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்திருக்கலாம். திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார் .
இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா ஒரு ஒரு ஜாலியான மனிதர். கடின உழைப்பாளி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை அடித்துவிட்டார். அடுத்து அவருடன் நான் எப்போது படம் நடிப்பேன் என ஆவலாக உள்ளேன்.
நடிகர் ஆர்யா பேசும் போது,
இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலில் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார். நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும், மாஸ் காட்சிகளும் அதிகமாக வைக்கச் சொல்லி விஷால் கூறியுள்ளார். வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை, நன்றி.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம். இப்படி ஒரு காட்சியில் எங்களால் மீண்டும் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப் பெரிய பலம். இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது. கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை. அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார். துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பாருங்கள்.
இயக்குனர் ஆனந்த் சங்கர் பேசியதாவது,
எனது முந்தைய இரு படங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு போய்ச் சேரும். நடிகை மிர்னாளினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம். அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அவர் டான்ஸர் கூட.
இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார், பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கைதி, விக்ரம்வேதா படங்களின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை. அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம். அதேபோல் எதிர்பார்ப்புகளைத் தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. இப்படம் சுலபமாக தற்போது வெளியேறுவதற்குக் காரணம் தயாரிப்பாளர் வினோத். மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை.
விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி. மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.
தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில்,
என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார். அதன் மூலம் 14 படங்களை தயாரித்து, தயாரிப்பு, தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாகக் கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகர்களாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால், ஆர்யாவுக்கும், இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிசல்ட் இப்படத்தின் வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன்.
நடிகை மிருணாளினி ரவி பேசியதாவது,
எனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு மிகப் பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய நடிகர். எனக்கு கூச்சமாக பயமாகத்தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரை போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தில் அழகான பாடல்களை கொடுத்த தமன்அவர்களுக்கு நன்றி. தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
வசனகர்த்தா ஷான் கருப்பசாமி பேசுகையில்,
நோட்டா படத்துக்கு பிறகு ஆனந்த் சங்கருடன் இணைந்து பணி புரிந்துள்ளேன். இப்படத்தின் டீசரில் வரும் டயலாக்குகள் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படத்தில் ஒவ்வொரு ஆக்சன் சீன் பின்னாலும் ஒரு எமோஷனல் இருக்கும். உளவியல் ரீதியாக பல வசனங்களை வைத்துள்ளோம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.
கலை இயக்குனர் ராமலிங்கம் பேசியதாவது,
இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் என்று சொல்லலாம். எனது முயற்சியின் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கிறேன். இந்த படத்தில் ஹீரோவின் தந்தையின் கதாபாத்திரத்தின் பெயரை ராமலிங்கம் என எனது பெயரை இயக்குனர் வைத்துள்ளார், அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் சிங்கப்பூர் செட்டை ஐதராபாத்தில் உருவாக்கினோம். இந்தப்படத்தில் பணி புரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில்,
நோட்டா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஆனந்த் ஷங்கருடன் இணைந்துள்ளேன். இந்தப் படத்தில் லேட்டாகத்தான் இணைந்தேன். ஒரு உலகத்தரம் வாய்ந்த என்கின்ற வார்த்தையை நிரூபித்தவர் ஆனந்த் ஷங்கர். ஒரு படத்தின் கதைதான் அந்தப் படத்தின் பின்னணி இசையை தீர்மானிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. பின்னணி இசை நினைத்ததை விட அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
‘எனிமி’ நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
Tags: enemy, Vishal , Arya, Anand Shankar, sam cs, thaman, Prakash Raj , Thambi Ramaiah , Karunakaran , Mamta Mohandas, Mirnalini Ravi