அருள்நிதி நடிக்கும் ‘டைரி’

22 Jul 2020

2019ம் ஆண்டில் வெளிவந்த ‘கே 13’ படத்திற்குப் பிறகு அருள்நிதி தற்போது ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அடுத்ததாக ‘டைரி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இன்னாசி பாண்டியன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் அஜய்ஞானமுத்துவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். 

‘டைரி’ படம் ஒரு கிரைம் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாம். 

படம் பற்றி தயாரிப்பளார் கதிரேசன் கூறுகையில்,

"சர்வதேச ரசனைகளுக்கு ஏற்ற வகையிலான படங்களை உருவாக்குவதில் எங்கள் தயாரிப்பு நிறுவனம்  கவனம் செலுத்துகிறது. இயக்குநர் இன்னாசி பாண்டியன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, படத்தின் கதைக் கரு மற்றும் அதை அவர் விவரித்த விதத்தில் நான் பெரிதும் கவரப்பட்டேன். 

திகில் மற்றும் மர்மங்களுடன் ஆச்சரியங்கள் நிரம்பிய கதை இது. திரைத்தொழிலின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள் நிதியின் படங்கள் லாபமீட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம். 

படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகுந்த நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பதால், தனிப்பட்ட முறையில் நான் 'டைரி' படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன். அரசாங்கத்தின் அனுபதி கிடைத்ததும் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கும்," என்றார்.

பவித்ரா முக்கிய  வேடத்தில் நடிக்க வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் நக்கலைட்ஸ் தனம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோன் எதன் யோஹான் இசையமைக்க, எஸ்.பி.ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். பிரதீப் தினேஷ் சண்டைக் காட்சிகளை அமைக்க ஞானகரவேல் பாடல்களை எழுதுகிறார்.

Tags: arulnithi, diary, innasi pandiyan

Share via: