‘சித்தா’, மீண்டும் நடிகராக அறிமுகமாகிறேன் - சித்தார்த்

11 Sep 2023

நடிகர் சித்தார்த் அவரது படத் தயாரிப்பு நிறுவனமான ஏடகி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சித்தா’.

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மலையாள நடிகை நிமிஷா சஜயன், சித்தார்த் ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்க, அஞ்சலி நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படம் பற்றி சித்தார்த் கூறுகையில், 

 “சித்தப்பா’ என்பதன் சுருக்கம் தான் ‘சித்தா’. படத்தில் கதையின் நாயகனான எனக்கும், எனது அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள் தான் படத்தின் கதை. ஆனால், அதை மட்டுமே கதையாகச் சொல்லாமால், சமூகத்தில் நடக்கும் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு அதற்கு எந்தவித ஒப்பனையும் இன்றி, அப்படியே மிக அழகான ஒரு படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். 

இது சர்வதேச படம், வெளியான பிறகு நிச்சயம் பல விவாதங்களை ஏற்படுத்தும். அதுமட்டும் அல்ல, இந்த படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்த பிறகு அவர்களுடன் நான் விவாதம் நடத்த இருக்கிறேன். அதனால், இந்த படத்தை பலருக்கு நாங்கள் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளோம். தற்போது நாங்கள் யாரை மதிக்கிறோமோ, யாரை எல்லாம் பார்த்து பயப்படுகிறோமோ, அவர்களுக்கு எல்லாம் படத்தை போட்டு காட்டி விட்டோம், அவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டி விட்டார்கள். அவர்கள் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.

தயாரிப்பாளர் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கடத்தல் திரில்லர் படம். ஆனால், அதை முழுவதும் சினிமாத்தனமாக சொல்லாமல், மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற உணர்வு ஏற்படும்.

கடத்தல் திரில்லர் என்றதுமே படம் வேறு மாதிரியாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், முழுக்க முழுக்க மிக யதார்த்தமான படமாகத்தான் இருக்கும், அது தான் இந்த படத்தின் சிறப்பு என்று கூட சொல்லலாம். நானே இந்த படத்தில் புதிதாகத் தெரிகிறேன். நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 21 வது வருடத்தில் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அருண் குமார் என்னை மீண்டும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார், என்று சொல்லும் அளவுக்கு படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிக முக்கியமானது. நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் நாளில் எப்படி நடித்தாரோ, அதே போல் தான் இறுதி நாள் வரை நடித்தார். எந்த ஒரு இடத்திலும் ஏற்றம் இறக்கம் இல்லாமல்,  அந்த கதாபாத்திரத்தை மிகச் சரியாகக் கையாண்டிருந்தார். அதைப் பார்த்து நான் வியந்து விட்டேன். அதற்கு காரணம் நாங்கள் படத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சி தான். இந்த படத்தில் நான்,  நிமிஷா, அஞ்சலி நாயர் போன்றவர்கள் தான் சினிமா அனுபவம் உள்ளவர்கள். ஆனால், மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் இதுவரை எந்த ஒரு கேமரா அனுபவமும் இல்லாதவர்கள், அவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பதோடு, ஒரு காட்சியில் அல்ல ஒரு வசனம் பேசி நடித்திருப்பவர்களுக்கு கூட முறையான பயிற்சி அளித்து நடிக்க வைத்திருக்கிறோம்.

10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீட் நுனியில் உட்கார்ந்து இந்த படத்தைப் பார்ப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்வது போல் கதை நகரும். அதன் பிறகு படம் உங்களை கட்டிப்போடும் விதத்தில் பயணிக்கும். ஒரு நிமிடம் கூட நீங்கள் கவனம் சிதறாமல் படத்துடன் பயணிப்பீர்கள். 

இதை விட ஒரு நல்ல படத்தை இனி எடுக்க முடியாது, இப்படி நான் சொல்வது உங்களுக்கு அதிகம் பேசுவது போல் இருக்கும். ஆனால், படத்தை நீங்கள் பார்த்த பிறகு, இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு இவங்க ஏன் இப்படி அடக்கி வாசிச்சாங்க என்று நினைப்பீர்கள், அப்படி ஒரு படமாக ‘சித்தா’ இருக்கும்.” என்றார்.

இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் படம் குறித்து கூறுகையில், 

“சித்தார்த் சாரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை நான் எழுதினேன். இதற்கு முன்பு நான் இப்படி செய்ததில்லை. படம் பண்ணலாம் என்று பேசினோம், அதன் பிறகு அவர் அட்வான்ஸ் கொடுத்தார். பிறகு தான் இந்த கதையை நான் எழுதினேன். இது கடத்தல் திரில்லர் ஜானர் கதை என்றாலும் இதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்தில் நடக்கும் சம்பவத்தை முழுவதும் சினிமாத்தனமாக அணுகாமல், தனிப்பட்ட வாழ்க்கை முறையோடு தொடர்புபடுத்திக் கொள்வது போல் உருவாக்கியிருக்கிறேன். 

ஒரு குழந்தை காணாமல் போகிறது, அந்த சம்பவத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதறிப்போகிறது, பிறகு அது ஒன்றாக சேர்வது எவ்வளவு சிரமம் என்ற ரீதியில் கதை நகரும். படம் பார்க்கும் போது, வில்லன் மீதோ அல்லது வேறு எங்கோ உங்கள் கவனம் இருக்காது. அந்த சம்பவத்தை நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக்கொள்வது போலத்தான் இருக்கும். இப்படி ஒரு கதை எழுத ஒரு சம்பவம் அல்ல, நம் சமூகத்தில் நடந்த பல சம்பவங்கள் தூண்டுதலாக இருந்தது.

சித்தார்த் - நிமிஷா இடையிலான அழகான காதல் இருக்கிறது, சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுபூர்வமான பாசப் போராட்டம் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஒரு இயல்பான கதையை இதுவரை சொல்லாத வடிவில் சொல்லியிருக்கிறேன். இந்தக் கதையை எழுதும் போதே, எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், அவருடன் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும், அப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எழுதினேன். அதனல், இந்த படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்,” என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு நான்கு மொழிகளிலும் நடிகர் சித்தார்த்தே டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Tags: sidha, chiththa, su arunkumar, sidharth, nimisha sajayan, anjali nair

Share via: