மை டியர் டாலி - விமர்சனம்
20 Feb 2026
நவீன தமிழ் சினிமாவில் காதல் கதைகள் சொல்ல பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மை டியர் டாலி' ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.
காதலின் எதார்த்தத்தையும், அதன் பின்விளைவுகளையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் தொட்டுச் செல்லும் இந்தப் படம், விஜே பப்பு மற்றும் அனுபமா ஆகிய புதுமுகங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஒரு சாதாரண காதல் கதைக்குள் ஆழமான உணர்வுகளைப் புகுத்தி, பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளாரா என்று பார்க்கலாம்.
நாயகன் விஜே பப்பு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் நாயகி அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அவரது காதலைப் பொருட்படுத்தாத அனுபமா, அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொருவரின் காதலில் மூழ்கியிருப்பது தெரியவர, மனமுடைந்து பப்பு அந்தப் பணியிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு, திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் பப்புவுக்கு, அவர் மறக்க முயன்ற அதே அனுபமாவின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். மனதில் நின்ற காதலி மனைவியாக வரும் நிலையில், ஆனந்தக் கண்ணீருடன் சம்மதம் தெரிவித்து அவர் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், அந்தப் பெண் பார்க்கும் நிகழ்வுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் மையக்கரு.
விஜே பப்பு, காதல் நாயகனாக தனது பணியை நிறைவாகச் செய்திருக்கிறார். இடையிடையே தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த முயன்றாலும், அவை பெரிதாக எடுபடவில்லை. காதல் வலியை வெளிப்படுத்தக் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளிலும், பொம்மையைக் காதலியாக நினைத்து வாழும் காட்சிகளிலும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். நாயகியாக அறிமுகமாகும் அனுபமா, ஒப்பனையில்லாத இயல்பான அழகில் கவனம் ஈர்ப்பதோடு, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக கேபிஒய் ராஜவேலு, அவரது மனைவியாக சுதா, நாயகியின் தோழியாக தாரா, நாயகனின் அலுவலக தோழியாக கீர்த்தனா, நாயகனின் பெற்றோராக ஆஷா மற்றும் ராஜாமணி, நாயகியின் முன்னாள் காதலராக டொமினிக் ஆகிய அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.சேகர், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் திரைக்கதைக்கேற்ப காட்சிகளை அழகாகப் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். எம்.பாசிலின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. அவரது படத்தொகுப்பும் எளிமையான திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளது.
உயிரற்ற பொம்மையைப் பின்னணியாக வைத்து, காதலியின் பிரிவால் ஏற்படும் வலியைப் பார்வையாளர்களின் இதயங்களுக்கு கடத்த முயற்சித்திருக்கும் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், அதற்கான திரைக்கதையை எளிமையாகக் கையாண்டிருந்தாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
கதை சொல்லலிலும் தயாரிப்புத் தரத்திலும் சிறு சிறு குறைபாடுகள் தென்பட்டாலும், அவை பெரும்பாலும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டவை என்பது புரிகிறது. அந்தக் குறைகளைக் கடந்து பார்த்தால், இது நிச்சயம் கவனம் ஈர்க்கும் காதல் படமாகவே உருவெடுத்துள்ளது. இறுதியாக, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் காதல் கதைக்கான திரைக்கதையை சாமர்த்தியமாக எழுதி, புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு காதல் உணர்வுகளைப் பார்வையாளர்கள் மனதில் நிறைவாகக் கடத்திய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது.
Tags: my dear dolly

