மெல்லிசை - விமர்சனம்

30 Jan 2026

இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது சிலருக்கு வாழ்க்கையின் அர்த்தமாகவும், நிறைவேறாத கனவுகளின் சாட்சியாகவும் இருக்கும். 'மெல்லிசை' போன்ற திரைப்படங்கள், சராசரி மனிதர்களின் உள்ளார்ந்த ஏக்கங்களை, குடும்ப உறவுகளின் பின்னணியில் விவரித்து, பார்வையாளர்களை தங்களது சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தச் செய்கின்றன.

 

இயக்குநர் திரவ் இயக்கத்தில், கிஷோர் குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படம், ஒரு தந்தையின் இசைக்கனவு மற்றும் அதற்கான குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ச்சிகரமாகச் சொல்கிறது. எளிமையான கதைசொல்லல் மூலம், வெற்றி-தோல்விகளின் இடையே தவிக்கும் மனித மனங்களைத் தொட்டு, அன்பின் வலிமையை வலியுறுத்தும் இப்படம், குடும்ப ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தேர்வு.

தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர், சொந்த வீடு, அன்பு மனைவி, இரு பிள்ளைகள் என அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், பாடகராக வேண்டும் என்ற அவரது நீண்டகால கனவு நிறைவேறாததால், உள்ளுக்குள் ஒரு தோல்வி உணர்வு அவரைத் துரத்துகிறது. அவரது குரலுக்கு தீவிர ரசிகையாக இருக்கும் மகள், தந்தையை மேடையேற்றி அவரது கனவை நனவாக்க ஆசைப்படுகிறாள். மகளுக்காக மேடை ஏறும் கிஷோர், தனது இசைப் பயணத்தில் சில வெற்றிகளைச் சுவைக்கிறார். ஆனால், குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு இல்லாததால், மீண்டும் தடைகளைச் சந்தித்து தடுமாறுகிறார். இதனால், தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தது போன்ற விரக்தியில் தள்ளப்படும் அவரது வாழ்க்கை, இறுதியில் என்னவாகிறது? இந்தக் கேள்வியை, குடும்ப ஆதரவு இல்லாமல் சரிந்து போகும் சராசரி மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது 'மெல்லிசை'.

வெற்றியாளர்களின் பின்னணியில் எப்போதும் அன்பும் ஆதரவும் இருக்கும்; அவை இல்லையெனில் வெற்றி சாத்தியமில்லை என்பதை வலியுறுத்தும் இயக்குநர் திரவ், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அவரது பிள்ளைகள் வழியாக விவரிக்கும் உணர்ச்சிகரமான கதையை உருவாக்கியிருக்கிறார்.

நாயகன் கிஷோராக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஏக்கங்களும் தோல்வி உணர்வுகளும் கொண்ட குடும்பத் தலைவரின் பாத்திரத்துக்கு ஏற்றவாறு பொருந்துகிறார். அவரது அளவான நடிப்பு, பார்வையாளர்களை கதாபாத்திரத்துடன் உணர்ச்சியளவில் இணைக்கிறது.

கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட், குடும்பத்தின் பாதுகாப்புக்காக அனுசரித்துப் போகும் இயல்பான மனைவியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

கிஷோரின் மகளாக தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக ஜஸ்வந்த் மணிகண்டன், சிறுவயது முதல் இளம்பருவம் வரை இயல்பான நடிப்பால் திரைக்கதையை வலுப்படுத்துகின்றனர்.

ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் போன்றோர் குறைவான காட்சிகளிலும் திரைக்கதைக்கு நிறைவு சேர்க்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் கேமரா பணி, எளிமையானதாக இருந்தாலும் கதையின் உண்மைத்தன்மையை அதிகரிக்கிறது. நாயகனின் வீடு மற்றும் குடும்ப சம்பவங்களை நெருக்கமாகக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.

சங்கர் ரங்கராஜின் இசையில், பாடல்கள் கதையின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது.

எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் திரவ், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லி, தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

இப்படம், ஒரு நாயகனின் கதையாக மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் அனைவரும் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளும் எளிமையான வாழ்க்கையைச் சொல்கிறது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றை கடந்து செல்லும் போது, அன்பு இருந்தால் அனைத்தும் சாத்தியம் எனும் நம்பிக்கையை விதைக்கிறது இயக்குநர்.

கிஷோர், அவரது குடும்பம், கடன் வாங்கிய ஹரிஷ் உத்தமன், புதிய தலைமை ஆசிரியர் என அனைத்து கதாபாத்திரங்களும் அன்பின் வலிமையை வலியுறுத்துகின்றன. திரவின் எழுத்து, மனிதத்தை விதைக்கும் சிறந்த உதாரணம். 'மெல்லிசை' - உணர்வுகளைத் தொடும் ஒரு அழகான இசைக்கதை!

Tags: mellisai

Share via: