கூரன் - விமர்சனம்

01 Mar 2025

நிதின் வேமபட்டி இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கொடைக்கானலின் அமைதியான சாலையில், தனது தாயுடன் நடந்து சென்ற நாய்க்குட்டி, கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்ற ஒரு காருடன் மோதி இறந்துவிடுகிறது. இந்த சோகத்தைத் தொடர்ந்து, தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் ஒரு தாய் நாயின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பிரபல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் அதன் பக்கம் நின்று போராடுகிறார். அவர் நாயின் புகாரை காவல்துறையிடம் ஏற்க வைப்பதோடு, நீதிமன்றத்தில் வாதாடி தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க முனைகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? என்பதை நம்பமுடியாத காட்சிகளுடன், தொழில்நுட்ப கருவிகள் மூலம் விளக்குவதே ‘கூரன்’ படத்தின் கதை.

‘கூரன்’ என்ற தலைப்பு, கூர்மையான அறிவுத்திறன் கொண்ட ஒரு நாய், தனக்கு நடந்த அநீதிக்காக போராடுவதைக் குறிக்கிறது. ‘கூர்மையான அறிவுத்திறன்’ என்பதை சுருக்கி, இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதன்மை கதாபாத்திரமான வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, உடல் மொழி மற்றும் நிதானமான நடிப்பு பாராட்டத்தக்கது. நீதிமன்றத்தில் தனது வாதத்தின் மூலம், நாயின் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்வையாளர்களுக்கு தெளிவாக கடத்தியிருக்கிறார்.

ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சிறப்பாக விளங்குகிறது. பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் படி, நாய் அதன் பாத்திரத்தை மிகவும் நம்பிக்கையுடன் நிறைவேற்றியிருக்கிறது.

நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா, வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியன், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் போன்றோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவை அமைத்திருப்பதோடு, நாயின் நடவடிக்கைகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் கதைக்களத்திற்கு ஏற்ப உணர்ச்சிகளை ஊட்டியிருக்கிறார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, நாய் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சமம் என்ற கருத்தை தனது திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். “மதுபானக் கடைகள் மூலம் எவ்வளவு பணம் வருகிறது என்று பார்க்கும் அரசாங்கம், அதன் மூலம் எவ்வளவு பிணம் விழுகிறது என்பதை பார்ப்பதில்லை” போன்ற கூர்மையான வசனங்கள் மூலம் சமூக சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கார் ஏற்றி கொல்லப்பட்ட குட்டிக்காக ஒரு தாய் நாய் எப்படி காவல் நிலையம் செல்லும்? அந்த நாய்க்காக வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? நீதிமன்றம் அனுமதிக்குமா? என்ன நடந்தது என்பதை நாயால் சொல்ல முடியுமா? போன்ற பல கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழுந்தாலும், அனைத்து கேள்விகளுக்கும் வரலாற்று கதை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பதிலளிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் நிதின் வேமுபதி.

பார்வையற்றவரை சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியாக சித்தரித்திருப்பது, அவருக்கான தனித்திறன் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியளித்தாலும், அனைத்தையும் புரியும்படி விவரித்திருக்கும் இயக்குநர், தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

‘கூரன்’ படம் ஒரு சமூக அக்கறையை மையமாகக் கொண்டு, உணர்ச்சிகளைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. நாயின் உணர்வுகளையும், அதற்கான நீதிப் போராட்டத்தையும் மிகவும் உண்மையாகவும், உணர்ச்சிமயமாகவும் சித்தரிக்கும் இந்த படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Tags: sa chandrasekar, kooran

Share via: