மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, முதல்வர் அறிவிப்பு

12 May 2021

கொரானோ பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும், இரண்டாம் அலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளைக் காப்பாற்றும் அரும்பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும், இதரப் பணியாளர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர்.

தமது உயிரைத் துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இது ஈடுசெய்யப்பட முடியாத பெரும் தியாகம்.

கொரானோ சிகிச்சையில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசரமருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏப்ரல், மே, ஜுன் - மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags: tamilnadu, mk stalin, corona

Share via: