தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு விஷால் பதிலடி

27 Jul 2024

தனது படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு தனது பதிவின் மூலம் பதிலடிக் கொடுத்துள்ளார் விஷால்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக விஷால் மீது குற்றச்சாட்டை முன்வைத்தது தயாரிப்பாளர் சங்கம். இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டது. இறுதியாக, விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

“தயாரிப்பாளர் சங்கக் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியை தயாரிப்பாளர் சங்கத்தின் நலிவடைந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கல்வி உள்ளிட்டவைக்காக பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?

திரையுலகில் நிறைய பணிகள் இருக்கின்றன. அதில் கவனத்தை செலுத்துங்கள். இரட்டை வரி விதிப்பு, திரையரங்க பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். விஷால் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பார். இதற்கு முன் படங்களே தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே… முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்”

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் சூடு பிடிக்கும் என்று திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

Tags: vishal

Share via: