வசந்தபாலன் இயக்கும் அடுத்த படம் ஆரம்பம்

18 Feb 2021

“ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்” ஆகிய படங்களை இயக்கியவர் வசந்தபாலன். அவற்றிற்கடுத்து ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கடுத்து அவர் இயக்க உள்ள புதிய படத்தில் ‘கைதி, மாஸ்டர்’ படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ‘சர்பேட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சிங்கம்புலி, பரணி, ஷாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியான ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் படித்த மூன்று நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் மூலம் இப்படம் தயாராகிறது. 

மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவரான எம் வரதராஜன், வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் துவங்கி அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர். வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயர் திகாரியாக உள்ளார். மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கம்ப்யூட்டர் உப பொருட்களை சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.

எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம் ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார். நிர்வாக தயாரிப்பாளர்காக பிரபாகரும், லைன் புரொட்யூசராக நாகராஜ் ராக்கெப்பனும் இருப்பார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Tags: vasantabalan, gv prakashkumar, dushara, arjun das

Share via: