'வாடிவாசல்' அப்டேட்: அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடக்கம்

11 Jul 2024

‘வாடிவாசல்’ படப்பிடிப்பினை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. எல்ரெட் குமார் தயாரித்து வரும் இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

‘விடுதலை’ வெற்றிக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக ‘விடுதலை 2’ உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் சூரியின் காட்சிகளை விட விஜய் சேதுபதியின் பின்னணி என்ன என்பது குறித்த காட்சிகளே அதிகம் இடம்பெறவுள்ளது.

‘விடுதலை 2’ படத்திற்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்குவார் என்று பேச்சுகள் நிலவுகிறது. ஆனால், இது தொடர்பான பணிகள் எதுவுமே தொடங்கப்படாமல் இருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, “’விடுதலை 2’ இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது படமாக்கும் காட்சிகளை அத்தோடு இணைத்து இறுதிகட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

மேலும், ‘வாடிவாசல்’ பணிகளை செப்டம்பரில் தொடங்கவுள்ளார்கள். வெளிநாட்டில் நடைபெற்று வரும் கிராபிக்ஸ் பணிகள் இதில் அடங்கும். அதன் பணிகள் எப்படி வருகிறது என்பதை வைத்து இங்கு படப்பிடிப்பு திட்டமிடவுள்ளார் வெற்றிமாறன். 

2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பிலேயே சூர்யாவை வைத்து பிரதான காட்சிகளை படமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்” என்று தெரிவித்தார்கள்.

Tags: vadivaasal, suriya, vetrimaaran

Share via: