இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) அதாவது தனித்துவமான பெண் என்கிற விருதை இந்திய தேசிய வழக்கறிஞர்  சங்கம் (INBA) கடந்த 2018ல் இருந்து வருடம் தோறும் 100 சாதனை பெண்களுக்கு வழங்கி வருகிறது.

இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கத்தின் (INBA) ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான செல்வி. வினாக்சி கதன் என்பவர் இதை 2018ல் துவங்கினார். நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பதே இந்த விருதுகளின் நோக்கம்.

கடந்த நான்கு வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான பட்டியலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள், மதிப்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 500 முன்னணி நிறுவனத்தின் சிஇஓக்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல துறையை சேர்ந்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் நூறு பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த விருது பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) என்கிற புத்தகமும் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்த 2023 ஆம் வருடத்தில் ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) விருது வழங்கும் விழாவில் 5-வது பதிப்பு வெளியீட்டுடன் கூடிய விருது வழங்கும் விழா மார்ச்-11 அன்று  நடைபெற்றது.

இந்த வருடம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி லிசா கில், ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் சசிகலா புஷ்பா ராமசாமி, பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற டாக்டர் சோமா கோஸ், பத்மா ஸ்ரீ வாட்த்சவா, ஐஏஎஸ் அதிகாரியான சௌமியா சர்மா, மாநில ஆதிவாசிகள் நலத்துறை அமைச்சரான திருமதி ரேணுகா சிங் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த சாதனை பெண்மணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் இந்த முறை தமிழகத்திலிருந்து முதன்முறையாக நடிகை லிசி ஆண்டனி இந்த தனித்துவமான பெண் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.