பணம் வாங்காமல் நடிக்கத் தயார் - ‘சிட்தி’ விழாவில் ஆரி பேச்சு
08 Apr 2022
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் 'சிட்தி'.
பயஸ் ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அஜி ஜான் கதாநாயகனாக நடிக்க, அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். முக்கிய வேடங்களில் I. M. விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ‘சிட்தி’ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ள படம் இது.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் இனிதே நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் மகேஷ்வரன் நந்தகோபால் பேசுகையில்,
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.
நாயகி அக்ஷயா உதயகுமார் பேசியதாவது,
முதல் முறை ஒரு மேடையில் தமிழ் பேசுகிறேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன் முதலாக நடக்கும் சம்பங்கள் மிக சந்தோசமாக இருக்கும். அப்படிப்பட்ட கனவுதான் எனக்கு இந்த படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் பேசியதாவது,
நான் 100 படங்களுக்கு மேல் பல மொழிகளில் வேலை செய்துள்ளேன். ஒரு படத்தில் மொத்த படக்குழுவினரும் நன்றாக இருந்தால் தான் படம் நன்றாக வரும். சிட்தி படத்தில் மிக அற்புதமான குழுவினர் இணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் படம் பற்றிய புரிதல் இருந்ததாலே தான் இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் ஒரு நாள் எனது இந்துஸ்தானி இசையை வேறு ஜானரில் கலந்து பயன்படுத்த போவதாகச் சொன்னார். அவரது தெளிவு பிரமிக்க வைத்தது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,
மனோகரி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, மலையாளத்தில் ஒரு படம் முடித்துள்ளேன், ஒரு தமிழனாக தமிழில் எனது முதல் படம் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன் என்றார். மலையாள திரையுலகம் மிகப் பெரிய திரையுலகமாக இருக்கும் போது, அவர் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பு அளப்பறியது. அவர் இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இயக்குநருடன் நான் பேசிய வார்தைகள் குறைவு தான். இசையமைப்பாளர் ஒரு மெலடி கிங். அவர் சிறப்பாக வேலை செய்துள்ளார். மொத்த குழுவும் அயராத உழைப்பை தந்துள்ளனர். படத்தின் நிகழ்வை சென்னையில் வைக்கும் போது, யாரையாவது அழைக்கலாம் என்றபோது ராஜன் சாரை அழையுங்கள், உதயகுமார் சாரை அழையுங்கள் என்றேன். எல்லா நிகழ்வுகளுக்கும் இருவரும் வருகிறார்கள் என்ற சோர்வு பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும். சினிமாவில் யாரும் தோற்றுவிடக் கூடாது என நினைப்பவர்கள் அவர்கள். அவர்கள் அருகில் அமர்வது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கடினமானது. கடலில் எடுத்த காட்சிகள் மிகவும் கடினமாது. தயாரிப்பாளரிடம் நான் ஓடிடிக்கு போகலாம் என கூறிய போது, அவர் தியேட்டர் தான் என்று உறுதியுடன் கூறினார். காரணம் அவர் இயக்குனராக வேண்டும் என சென்னை வந்தவர். அதனால் நான் சாதிக்க முடியாததை நிகழ்த்திக் காட்ட, தயாரிப்பாளராக மாறியவர். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் ஆரி பேசியதாவது,
நான் உள்ளே வரும் போதே யார் யார் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டேன். ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போது நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்களே என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமீன் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்யத் தயாராக இருக்கிறேன். இந்த இயக்குனரும் நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது. ஆனால் அதை தடுத்தது மோடி தான், டிமானிடைசேசன் வந்து, அது படத்தை பாதித்து விட்டது. நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே, பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே, ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப் படத்தின் டிரைலரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…
இந்தப் படம் மிகச் சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிகச் சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
Tags: sidthi, pious raj, aari