சசிகுமார் நடிக்க விருமாண்டி இயக்கும் புதிய படம்
19 Jan 2021
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தை இயக்கிய விருமாண்டி அடுத்து சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
‘க.பெ.ரணசிங்கம்’ படத்தில் உண்மைச் சம்பவத்தை கதையாக்கியது போல இந்த புதிய படத்தையும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் கதை எழுதியுள்ளாராம்.
1975ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை எழுதி முடித்திருக்கிறார். கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்துள்ளார் சசிகுமார்.
பரதன் பிலிம்ஸ் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கான அலுவலக பூஜை நேற்று நடைபெற்றது.
ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுத, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சிவனாண்டீஸ்வரன் படத் தொகுப்பு செய்கிறார்.
படத்தின் நாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்து இந்த வருடத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
Tags: sasikumar, virumandi, ghibran